20 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டம்; மாநகராட்சி திட்டத்தை நிராகரித்தது தமிழக அரசு

கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில், 50 ஏக்கர் பரப்பளவில், 20 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு நிராகரித்து விட்டது.கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் இருக்கின்றன. குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கான மின் கட்டணமாக பல கோடி ரூபாயை மாநகராட்சி செலவிடுகிறது. மேலும், தானியங்கி சிக்னல் மின் பயன்பாட்டுக்கான செலவையும் ஏற்றிருக்கிறது. இதை சரிக்கட்ட, சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது.

முதல்கட்டமாக, அ.தி.மு.க., ஆட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையத்தில் தலா ஒரு மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. அதன்பின், புல்லுக்காடு பகுதியில், 3.6 மெகாவாட் திறனுள்ள மையம் கூடுதலாக அமைக்கப்பட்டது. இதில், உற்பத்தியாகும் மின்சாரம், மின்வாரியத்திடம் வழங்கப்பட்டு, அதற்கான தொகை சேமிக்கப்பட்டது.வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், லாரிப்பேட்டை, பயன்பாட்டுக்கு வந்தால், மின் தேவை அதிகமாக இருக்கும் என கணக்கிட்டு, குப்பை கிடங்கு வளாகத்தில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. உற்பத்தியாகும் மின்சாரத்தை வாரியத்துக்கு வழங்க ‘கிரிட்’ அமைக்க வேண்டும். கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கு வளாகத்தில் அவ் வசதி இருந்ததால், அப்பகுதியில் கூடுதலாக அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதன்பின், மாநகராட்சி அதிகாரிகள் பலரும் மாறியதும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போதைய கமிஷனர் சிவகுரு பிரபாகரன், வெள்ளலுாரில் பழைய குப்பையை ‘பயோமைனிங்’ முறையில் அழித்து, மீட்கப்பட்ட, 50 ஏக்கர் பரப்பளவில், 20 மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டார். பங்கு பத்திரம் மூலமாக நிதி திரட்டி, இந்நிலையம் அமைக்க, தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது. சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு மின்வாரியம் தயக்கம் காட்டுவதால், இத்திட்டத்தை தமிழக அரசு நிராகரித்து விட்டது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ”வெள்ளலுாரில், 20 ஏக்கருக்கு சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. நல்ல திட்டம்; அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம்.

கடைசி நேரத்தில் நிதித்துறையில் நிறுத்தப்பட்டு விட்டது. முதலில், மின்சாரத்தை பெற்றுக் கொள்வோம் என மின்வாரியம் ஒப்புதல் தர வேண்டும். அத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், பயனுள்ளதாக இருக்கும். அதனால், மத்திய அரசின் திட்டத்தில், தெற்கு மண்டலத்தில், ரூ.120 கோடிக்கு பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை வழங்கியுள்ளோம்; அதில், சூரிய மின்னுற்பத்தி திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை மின்வாரியம் பெற்றுக் கொண்டால், பிரச்னை இல்லை,” என்றார்.