தமிழக முதல்வருக்கு தேர்தல் அறிக்கை நகல் அனுப்பி துாய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் நேருவுக்கும், 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் அறிக்கை நகல் அனுப்பும் போராட்டத்தை, கோவையில் துாய்மை பணியாளர்கள் நேற்று துவக்கினர்.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில், பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை, 2021ல் தேர்தல் வாக்குறுதிகளில், தி.மு.க., தெரிவித்திருந்தது.

Latest Tamil News

தற்போது ‘அவுட்சோர்சிங்’ முறையில் துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். துாய்மை பணியாளர்களுக்கு அரசு வேலை என்கிற, பணியிடமே இல்லாத சூழல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதியை, தி.மு.க., அரசுக்கு நினைவூட்டும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேரு ஆகியோருக்கு, தேர்தல் அறிக்கை நகல் அனுப்பும் போராட்டம், கோவை மாவட்ட நகர உள்ளாட்சி ஓட்டுனர், துாய்மை, டி.பி.சி., அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று நடத்தப்பட்டது.

கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்து விட்டு, தபால் அலுவலகம் சென்ற தொழிலாளர்கள், தபால் மூலமாக மனுக்களை அனுப்பினர்.

முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சட்டசபையில் நகராட்சி துறை அமைச்சர் நேரு பதிலளிக்கையில், ‘துாய்மை பணியாளர்கள் பணி நிரந்தரமில்லை. ‘அவுட்சோர்சிங்’ விடப்பட்டுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என கூறியுள்ளார்.

எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு எங்களை கைவிட்டு விட்டது; அனாதைகளாகி விட்டோம். தமிழகத்தின் முதல்வர், ‘அப்பா’ என்றழைக்கப்படுவதாக கூறும் சூழலில், அரசாணை வெளியிட்டு, எங்களது பணியிடத்தை பறிப்பது நியாயமா?

‘நிரந்தரம் செய்வோம்’ என கூறி விட்டு, பணியிடங்களையே பறித்து விட்டீர்களே. அரசாணையை திருத்தி, அரசு பணியிடங்களை மீண்டும் உருவாக்கித் தாருங்கள்’ என குறிப்பிட்டுள்ளனர்.

எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு எங்களை கைவிட்டு விட்டது; அனாதைகளாகி விட்டோம். தமிழகத்தின் முதல்வர், ‘அப்பா’ என்றழைக்கப்படுவதாக கூறும் சூழலில், அரசாணை வெளியிட்டு, எங்களது பணியிடத்தை பறிப்பது நியாயமா? ‘நிரந்தரம் செய்வோம்’ என கூறி விட்டு, பணியிடங்களையே பறித்து விட்டீர்களே.

‘ஓயாமல் போராடுவோம்’

ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறுகையில், ”இந்த போராட்டம் துவக்கம் தான்; நிரந்தரம் செய்யும் வரை, ஓயாமல் போராடுவோம். பணி நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளம் வழங்குவது தொடர்பாக, மே 5ல் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து, மனு கொடுக்க உள்ளோம்,” என்றார்.