வெள்ளலூரில் சூப்பர் திட்டம்.. கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் முக்கிய அறிவிப்பு

கோவை: கோவையில் 654 ஏக்கர் பரப்பளவு கொண்ட, வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு கொண்டு வரப்படும் குப்பை, விண்ட்ரோ முறையில் தரம் பிரித்து, உரமாக்க தினமும் 700 மெட்ரிக் டன் குப்பை மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை மூலம் தினமும் மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் ரூ.69 கோடியில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.

கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், “654 ஏக்கர் பரப்பளவு கொண்ட, வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு கொண்டு வரப்படும் குப்பை, விண்ட்ரோ முறையில் தரம் பிரித்து, உரமாக்க தினமும் 700 மெட்ரிக் டன் குப்பை மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை மூலம் தினமும் மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. எம்.சி.சி. பிளாண்ட், இயற்கை எரிவாயு கலன் ஆகியவற்றின் மூலம் தினமும் 100 மெட்ரிக் டன் குப்பை மேலாண்மை செய்யப்படுகிறது.

குப்பைக்கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பையை அகற்ற ரூ.60 கோடியில் பயோமைனிங் திட்டத்தை செயல்படுத்தப்பட்டு 54 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. பயோ மைனிங் 2.0 திட்டம் ரூ.58.54 கோடியில் தயாரிக்கப்பட்டு 7.94 லட்சம் மெட்ரிக் டன் குப்பை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மாநகரில் தினமும் சேகரமாகும் மக்கும் கழிவுகளை அகற்ற ரூ.69 கோடியே 20 லட்சத்தில் 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயற்கை எரிவாயு மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. மக்கும் குப்பையை தனியாக சேகரித்து எரிசக்தி உருவாக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வெள்ளலூர் வளாகத்தை சுற்றிலும் 4,200 மரக்கன்றுகள், சாலையின் இருபுறமும் 800 மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குப்பைக்கிடங்கில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத்தொட்டி, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு, குப்பைக்கிடங்கில் 1000 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் குழாய் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குப்பைக்கிடங்கை 24 மணி நேரமும் கண்காணிக்க பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் உரக்கிடங்கு, மண்புழு உர மையம், பயோ மைனிங் போன்ற திட்டங்களை கண்காணிக்க துணை ஆணையாளர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு சிவகுரு பிரபாகரன் ஐஏஏஸ் கூறினார்.