கோவை : ஈஷா செம்மேடு இயற்கை பண்ணையில் நடந்து வரும், மூன்று மாத இயற்கை விவசாய களப் பயிற்சியில், இளைஞர்கள் பலர் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.
‘ஈஷா மண் காப்போம்’ இயக்கம், ஏப்., துவங்கிய ஜூன் வரையிலான மூன்று மாத இயற்கை விவசாய நேரடி களப்பயிற்சி வாய்ப்பை, 30 ஏக்கர் பரப்பளவுக்கும் மேல், கோவை ஈஷா செம்மேடு இயற்கை பண்ணையில் ஏற்படுத்தி உள்ளது.
உழவில்லா விவசாயத்துக்கு என்று பிரத்யேக இடம், மண் உயிரியல் ஆய்வுகளுக்காக தனியிடம், காய்கறி, பழங்கள், கீரைகள் பயிரிடும் பகுதி, நெல் பயிரிடும் பகுதி மற்றும் நாட்டு மாடுகளுக்கான தொழுவம் என, ஒரே இடத்தில், விவசாயம் குறித்த ஒருங்கிணைந்த கற்றல் அனுபவம் கிடைக்கும் வகையில், பண்ணை உருவாக்கப்பட்டு உள்ளது.
மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா கூறியதாவது:
நீர் மேலாண்மை, களை மேலாண்மை, இடுபொருள் விவசாயம், இடுபொருள் இல்லாத விவசாயம் மற்றும் இயற்கை உரமாக பயன்படுத்தப்படும் (இடுபொருள்) ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், வேப்பங்கொட்டை கரைசல் உள்ளிட்டவைகளை தயாரிப்பது, எந்தெந்த பயிருக்கு, எப்படி இயற்கை உரங்களை வழங்க வேண்டும் என்பது வரை, அனைத்து விஷயங்களும் கற்றுத்தரப்படுகின்றன. கால்நடைகளை பராமரித்தல் தொடர்பான பயிற்சி மற்றொரு முக்கிய அம்சமாக இருக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதில் பங்கெடுக்கும் நபருக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு அனைத்தும் உள்ளடக்கியதாக இந்த பயிற்சி அமைந்துள்ளது.ஈஷா மண் காப்போம் இயக்கத்தின், அடுத்த மூன்று மாத இயற்கை விவசாய களப்பயிற்சி, வரும் ஜூலை முதல் செப்., வரை நடக்கிறது. இதில் பங்கேற்க, 63832 62508 என்ற எண்ணில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் பெறலாம்.
Leave a Reply