நீலம்பூரில் அறிவித்த புதிய போலீஸ் ஸ்டேஷன் வருமா… வராதா… ; திட்ட வரைவு அனுப்பி பல ஆண்டுகள் ஆச்சு

சூலுார்: சூலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையை இரண்டாக பிரித்து, நீலம்பூரில் புதிய ஸ்டேஷன் உருவாக்கும் பணி பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில், சூலுார், கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை, செட்டிபாளையம், கோவில் பாளையம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், சூலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை ஸ்டேஷன்கள் உள்ளன.

Latest Tamil News

சூலுார் ஸ்டேஷன் எல்லைக்குள், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், சூலுார் உள்ளிட்ட பேரூராட்சிகள், 12க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 50 குக்கிராமங்கள் உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இதேபோல், சுல்தான்பேட்டை ஸ்டேஷனுக்கு உட்பட்டு, 17 ஊராட்சிகளில், 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். செட்டிபாளையத்துக்கு உட்பட்ட பேரூராட்சி, ஊராட்சிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

கிட்டத்தட்ட, 4 லட்சம் பேருக்கு, ஒரு இன்ஸ்பெக்டர், ஆறு எஸ்.ஐ., க்கள், மட்டுமே உள்ளனர். போலீசாரும் தேவைக்கு குறைவாகவே உள்ளனர்.

பரந்து விரிந்த நிலப்பரப்பு, அதிக மக்கள் தொகை உள்ள இப்பகுதிகளில் அடிக்கடி நடக்கும் விபத்துகள், குற்ற சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை தடுக்கவும், குறைக்கவும் போலீசார் திணறி வருகின்றனர். குற்றப்பிரிவுக்கு என தனி போலீசார் இல்லாததால், வேலைப்பளுவால், போலீசார் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

மாநகராட்சியுடன் சேர்ப்பு

மயிலம் பட்டி, நீலம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகள் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் கோவை விமான நிலைய பிரதான நுழைவாயில் நீலம்பூர் பகுதியில் அமைய உள்ளன. இதனால், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கம் அதிகரிக்கும். போக்குவரத்து சீர் செய்தல், பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு ஏராளமான போலீசார் தேவைப்படும் நிலை உருவாகும்.

மயிலம் பட்டி, நீலம்பூர் பகுதியில் ஐ.டி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. அதனால், குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

நீலம்பூரில் புது ஸ்டேஷன்

கடந்த ஐந்து ஆண்டுகளாக சூலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையை பிரித்து, நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றது. இதுகுறித்து திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை. கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.

தற்போது, நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில், காவல் துறை மானியக் கோரிக்கையிலாவது, புதிய ஸ்டேஷன் அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,’ சூலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பெரியது. போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலம்பூரில் புதிய ஸ்டேஷன் உருவாக்க வேண்டும் என்ற திட்ட வரைவும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசுதான் முடிவை அறிவிக்க வேண்டும்,’ என்றனர்.