வாங்க வாசிக்கலாம்… வாசிப்பை நேசிக்கலாம்! கோயமுத்துார் புத்தக திருவிழா ஜூலை 18ல் துவக்கம்

கோவை; கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா சார்பில், வரும் ஜூலை 18 முதல் 27 வரை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் புத்தக கண்காட்சி நடக்கிறது.

இது குறித்து, கோவை கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயமுத்துார் புத்தகத்திருவிழாவில், 280க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், புத்தகங்கள் வாங்கலாம்.

Latest Tamil News

புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், எழுத்தாளர்களும், கலைஞர்களும், பிரபல தலைவர்களும் பங்கேற்கும் கலை இலக்கிய நிகழ்வுகள், தினமும் நடைபெறும்.

புத்தக திருவிழாவின் சிறப்பு அம்சமாக, கொடிசியா வாழ்நாள் சாதனையாளர் விருது அமைந்துள்ளது. இது ரூ.1.5 லட்சம் பரிசும், பாராட்டு மடலும் கொண்டது. இலக்கியம் சார்ந்து சாதனை படைத்துள்ள சான்றோர்களில், தகுதியான ஒருவருக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது.

வளரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், இளம் எழுத்தாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. கவிதை, புனைவு சாராதவை என்று மூன்று பிரிவுகளின் கீழ், பரிசுகள் வழங்கப்பட உள்ளன. படைப்புகளை சமர்பிக்க வரும் 15 கடைசி நாள்.

கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே, புத்தகத்திருவிழாவை பிரபலப்படுத்தும் விதமாக, குறும்படப்போட்டி நடத்தப்படுகிறது.

வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 25,000, இரண்டாம் பரிசாக 15,000, மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.

குறும்பட போட்டிக்கு, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். படைப்புகளை தலைவர், கோயமுத்துார் புத்தகதிருவிழா 2025 கொடிசியா, ஜி.டி.நாயுடு டவர்ஸ், ஓசூர் சாலை, கோவை-641018 cbf@codissia.com என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

பேட்டியின்போது, கொடிசியா தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.