24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள்; ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க இலக்கு

கோவை: மாநகராட்சி பகுதிகளில், 24 மணிநேர குடிநீர் திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக குற்றச்சாட்டு எழும் நிலையில், வரும் ஆக., மாதத்துக்குள் முடிக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கோவை மாநகராட்சியின் பழைய, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தை தனியார் நிறுவனம் செயல்படுத்துகிறது. இதற்கென, 1.50 லட்சம் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்குவது, 35 மேல்நிலை தொட்டிகள் புதிதாக கட்டும் பணிகள், 2019ல் துவங்கின.

இத்திட்டத்தில், 700 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணியானது, கொரோனா காரணமாக இந்தாண்டு ஜன., வரை நீட்டித்து, கால அவகாசம் வழங்கப்பட்டது; இருப்பினும் முடிந்தபாடில்லை.
தற்போது, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடுகளில் பிரதான குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. சாய்பாபா காலனி அருகே, பாரதி பார்க் மேல்நிலை தொட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு வழியாக, ராம் நகர், செம்மொழி பூங்கா, வ.உ.சி., பார்க் வரை தண்ணீர் செல்ல இணைப்பு வழங்கப்படுகிறது.
அங்கிருந்து, ஆடீஸ் வீதி வழியாக கலெக்டர் அலுவலகம் எதிரே சென்று, லங்கா கார்னரில் பிரதான குழாய் இரண்டாக பிரிகிறது. ஒரு இணைப்பு டவுன்ஹாலுக்கும், மற்றொன்று திருச்சி ரோடு வழியாக அல்வெர்னியா பள்ளி எதிரேயும் முடிவடைகிறது; அங்கு ஒரு ‘வால்வு’ இடம்பெறுகிறது.
ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள, புதிய தண்ணீர் தொட்டி வரை இந்த இணைப்பு செல்கிறது. சிறுவாணி தண்ணீர் வராத பட்சத்தில், பில்லுார் தண்ணீரை கரும்புக்கடை வரை வழங்குவதே, இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

80 சதவீதம் பணிகள் ‘ஓவர்!’மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
திருச்சி ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, ஒப்பணக்கார வீதி, சிங்காநல்லுார் – காமராஜர் ரோடு இந்த இடங்களில் பணிகளை முடித்தால் மட்டுமே இத்திட்டம் முழுமையடையும்; எனவே, இங்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி ரோட்டில் சுங்கம் வரை பிரதான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது, 80 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டாலும், போக்குவரத்து அதிகம் மிக்க, இந்த நெடுஞ்சாலைகளில் இணைப்பு வழங்குவது சவாலாக உள்ளது.
புதிதாக கட்டப்படும், 35 மேல்நிலை தொட்டிகளில், 23 கட்டப்பட்டுள்ளன; 13 தொட்டிகள் வரும் ஆக., மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும். இந்தாண்டுக்குள், 24 மணிநேர குடிநீர் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
ஆக., மாதத்துக்குள்!

24 மணிநேர குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழு தலைவர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது,”1.50 லட்சம் குடிநீர் இணைப்புகளில், 1.30 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளையும் ஆக.,க்குள் முடிக்க கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்,” என்றார்.
நடக்கட்டும்… நடக்கட்டும்திருச்சி ரோடு, சுங்கம் முதல் ராமநாதபுரம் வரையும், சிங்காநல்லுார் அருகே காமராஜர் ரோடு, வரதராஜபுரம் பகுதிகளிலும், 24 மணிநேர குடிநீர் திட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடித்து, தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.