அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

வால்பாறை,; அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாபயணியருக்கு மீண்டும் அனுமதி வழங்கியதால், இருமாநில சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி – வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இருமாநில சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம் வரை சுற்றுலாபயணியர் அங்குள்ள அருவில் குளித்து மகிழ்ந்தனர்.இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக கேரள மாநிலத்தில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் கடந்த மாதம், 26ம் தேதி முதல் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு குறைந்ததால், அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க வனத்துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இருமாநில சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சாலக்குடி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கேரளாவில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து வந்ததால், இங்குள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றனர்.