அரசு பள்ளிகளில் பி.டி.ஏ., சும்மா பெயரளவு! காற்றில் பறக்கும் விதிகள்; பள்ளி வளர்ச்சி முடக்கம்

கோவை; கோவையிலுள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் (பி.டி.ஏ.,) செயல்பாடுகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பள்ளி கல்வி மேம்பாட்டுக்காக, பி.டி.ஏ., அமைக்கப்படுகிறது. இது பள்ளி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பாலமாக செயல்பட, மாணவர் நலனுக்காக கட்டட வசதி, கழிப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம் போன்றவை திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டியது இக்குழுவின் நோக்கமாகும்.

பள்ளியில் தேவையான ஆசிரியர்கள் நியமிக்க பி.டி.ஏ., கருத்து வழங்கலாம். இதில், தலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் நான்கு பெற்றோர் உறுப்பினர்கள் உள்ளடங்க வேண்டும். இவர்களின் குழந்தைகள், அந்த பள்ளியில் கல்வி பயின்று வர வேண்டும் என்பதும் ஒரு முக்கிய விதியாகும்.

ஆனால், பல்வேறு பள்ளிகளில், இந்த அமைப்பு முறையாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, பி.டி.ஏ., உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறையும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இதனால், ஒரே உறுப்பினர்கள் நீண்ட காலமாக பதவியில் இருந்து வருவதால், புதிய மாற்றங்கள் ஏற்படாமல், பள்ளி வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.விதிமுறைப்படி, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய பி.டி.ஏ., உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பொதுவாக, 8ம் மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு இக்குழுவில் உறுப்பினராக பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஒரே பெற்றோர், உறுப்பினர்கள் நீண்ட காலமாக, பதவியில் இருந்து வருகின்றனர்.

இதே வேளையில், பள்ளி மேலாண்மை குழுக்கள் சில இடங்களில் சுறுசுறுப்பாக செயல்படுவதை பார்க்கும்போது, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகள் பின்தங்கி உள்ளன. இதனை ஒழுங்குபடுத்தும் வகையில், மாவட்ட கல்வித்துறையும் பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்த அமைப்பால் பயனில்லை.

இவ்வாறு, அவர்கள் கூறுகின்றனர்.

1