கோவை; மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுக்களின் எண்ணிக்கை, உயர்ந்து வருகிறது. ஆனால் தீர்வு காணும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளில் பலரும், ஓய்வு பெற்றதாலும், இடமாறுதல் பெற்று சென்று விட்டதாலும், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திங்கள்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் சராசரியாக, 500 மனுக்களை அளிக்கின்றனர். அதோடு, பல்வேறு கோரிக்கைகள், குறைகளை தெரிவிக்கின்றனர்.

குறைதீர் கூட்டம் நடக்கும் நாளன்று, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்களான, பொது, தேர்தல், கணக்கு, வேளாண்மை, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர், ஆதிதிராவிட நல அலுவலர், கனிமவளத்துறை துணை இயக்குனர், வடக்கு மற்றும் தெற்கு கோட்டாட்சியர் உள்ளிட்ட, ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பர்.
மனு பெறும் அதிகாரிகள்
இந்த அதிகாரிகளில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., மாறுதலாகி சென்றுவிட்டார். மாவட்ட வழங்கல் அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் உள்ளிட்ட சில அதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டனர்.
அவர்களுக்கு பதிலாக வேறு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. அமைச்சர் வருகை, முதல்வர் காணொலி திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு, கலெக்டர் சென்றால் மாவட்ட வருவாய் அலுவலர் குறைதீர்ப்புக்கூட்டத்தை நடத்துவார்.
சில நேரங்களில் அவரும் சென்றுவிட்டால், அதற்கு அடுத்த ரேங்கில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர்கள்(முத்திரை, நெடுஞ்சாலை நிலமெடுப்பு, விமானநிலைய விரிவாக்கம்) உள்ளிட்ட அதிகாரிகள் கவனிப்பர். நேற்று முதல்வர் காணொலியில், மினிபஸ் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.அதில் பங்கேற்க கலெக்டர் சென்று விட்டார். மாவட்ட வருவாய் அலுவலரே குறைதீர்ப்புக்கூட்டத்தை நடத்தினார்.அதிகாரிகள் சாவகாசம்
அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய, பல அதிகாரிகள் நேற்று குறை தீர்ப்பு கூட்டத்துக்கு தாமதமாக வந்தனர். அதில் சிலர் விடுப்பு காரணமாக வரவில்லை.
இதனால் குறைதீர்ப்புக்கூட்டத்தில் மனுக்களை பெற்று, அதை துறை ரீதியாக நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டிய, மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் பலரும் குறைதீர்ப்புக்கூட்டத்தில் இல்லை. இதனால் மனுக்களை பெறுவதிலும், நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வதிலும் தாமதம் ஏற்பட்டதால், மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
நம்பி வரும் மக்கள்
கலெக்டரிடம் மனு அளித்தால், தங்கள் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று நம்பியே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சாதாரண ஏழை மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். ஆனால் அவர்களின் மனுவை பெற்று, நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், விரல் விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, எங்கு மனு அளிக்க வேண்டுமோ!
மனு அளிக்க நேரில் வர வேண்டியதில்லை
கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, நேரில் வந்துதான் மனு அளிக்க வேண்டுமென்பதில்லை. மாவட்ட இணையதளமான, coimbatore.nic.in, collrcbe@nic.in, 1100 என்ற 24 மணி நேர தானியங்கி தொலைபேசி எண்கள் வாயிலாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். மனுதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு மெசேஜ் வரும். அதில் கொடுக்கப்படும் எண் வாயிலாக, மனு நிலையை அறிந்து கொள் ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த புரிதல் இல்லாதவர்கள்தான் நேரில் மனு அளிக்கிறார்கள் என் றால், விபரமறிந்தவர்களும் நேரில்தான் மனு அளிக்கின்றனர்.
Leave a Reply