அரசு மருத்துவமனையில் ‘பயாப்சி’ மையம்.. எதிர்பார்ப்பு! காப்பீடு இல்லாத நோயாளிகள் திணறல்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், புற்றுநோய், நீர்கட்டி உட்பட அனைத்து வித நோய் கட்டிகளை கண்டறியும், ‘பயாப்சி’ (திசு பரிசோதனை) மையம் துவக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ரத்த பரிசோதனையில் காய்ச்சல் உள்ளிட்ட நோய் கிருமிகளை கண்டறிய முடியும். ஒரு சில முக்கிய நோய்களுக்கு ‘பயாப்சி’ எனப்படும் திசு பரிசோதனை மிக அவசியமாகிறது. இதன் வாயிலாகவே, புற்றுநோய் போன்ற நோய்களை உறுதி செய்து, சிகிச்சை பெற முடியும்.

பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் இதற்கான வசதி இல்லை. மாறாக, கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, திசு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுகிறது. குறிப்பிட்ட நாள் இடைவெளியில், அதன் முடிவுகள் பெறப்பட்டு, நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேநேரம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் சிலர், நகரில் உள்ள தனியார் ஆய்வகத்தில் ‘பயாப்சி’ பரிசோதனை செய்யவும் அவ்வபோது அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அங்கு, ஒரு பரிசோதனைக்கு, 400 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், 1000 முதல் 1,200 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக நோயாளிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அரசு மருத்துமவனையில், கட்டி, மரு, வீக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற வருவோர், சந்தேகத்தின்படி உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு ‘பயாப்சி’ எனப்படும் சதையின் மாதிரி எடுத்து பரிசோதனை செய்து, அதற்கேற்ப அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு திசு மாதிரி அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு, பரிசோதிக்க கட்டணம் எதுவும் கிடையாது.
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து பரிசோதனை முடிவு கிடைப்பதில் தாமாதமாகும் என்பதால், பலர், தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யவே முனைப்பு காட்டுகின்றனர். அங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பாதிக்கின்றனர்.
அரசு மருத்துவமனையிலேயே ‘பயாப்சி’ பரிசோதனை பிரிவு துவங்க வேண்டும். இதற்கென ‘பெத்தலாஜிஸ்ட்’ எனும் சிறப்பு டாக்டரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தனியாருக்கு அனுப்புவதில்லை!
மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (கோவை) சுமதி கூறியதாவது:மருத்துவ காப்பீடு திட்டம் வாயிலாக, அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள், அதற்கான புரிந்துணர்வு கொண்ட ஆய்வகத்தில் மட்டுமே ‘பயாப்சி’ பரிசோதனை மேற்கொள்கின்றனர்.காப்பீடு இல்லாதவர்களுக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு திசு மாதிரி அனுப்பி வைத்து, பரிசோதித்து முடிவு பெறப்படுகிறது. சிலர், விரைவாக அறுவை சிகிச்சை பெற வேண்டி, அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமல், அவர்களாகவே, தனியார் ஆய்வகத்தில் பரிசோதிக்கின்றனர்.அரசு மருத்துவமனை வாயிலாக எந்தவொரு தனியார் ஆய்வகத்திற்கும் நோயாளிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவது கிடையாது. இவ்வாறு, கூறினார்.
Leave a Reply