கோவை; சாலையோர வியாபாரிகள், கட்டாயம் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, ஒருங்கிணைந்த முகாம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 8,000 சாலையோர உணவு வணிகர்கள் உள்ளனர். சாலையோர கடை உரிமையாளர்களும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகளை பின்பற்றவேண்டும். ஆனால், பெரும்பாலான கடைகளில், விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை.

அசுத்தமான தண்ணீர் பயன்படுத்துவது, சமையலுக்கு ஒரே எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவது, பார்சலுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, டப்பா பயன்படுத்துவது, தடை செய்யப்பட்ட கலர்களை உணவுக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட பல புகார்கள் பெறப்படுகின்றன.இது போன்ற விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தரச்சான்றிதழ் பெற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கவும், பணியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தவும், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக பயிற்சி வழங்கவும், உரிய சான்றிதழ்கள் பெற்று தரும் வகையிலும், முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ”சாலையோர வியாபாரிகள் நலன் கருதி, ஒருங்கிணைந்த முகாம் ஏற்பாடு செய்துள்ளோம். 24ம் தேதி, காலை, 10:00 முதல் 1:00 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. இதில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு சான்றுக்கு விண்ணப்பித்தல், அடிப்படை உணவு பாதுகாப்பு பயிற்சி அளித்தல், மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
உரிய பயிற்சி பெற்று, விதிமுறைகளின்படி கடைகளை நடத்த வேண்டும். முகாமுக்கு வருபவர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் நகல் கொண்டு வரவேண்டும்,” என்றார்.
மேலும் விபரங்களுக்கு, 94866 54917/ 63699 02410 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Leave a Reply