கோவை; ”கோவையின் இரண்டாவது சந்திப்பாக போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மாற்றப்படும். மேம்பாட்டு பணிக்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,” என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.’அம்ருத் பாரத்’ திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் போத்தனுார், வடகோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் செய்யப்படும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், நேற்று ஆய்வு மேற்கொண்டார். போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
நிருபர்களிடம் ஆர்.என்.சிங் கூறுகையில், ”கோவையின் இரண்டாவது சந்திப்பாக, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மாற்றப்படும்.அதன் மேம்பாட்டு பணிக்காக, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முழுமையாக முடிய, மூன்று ஆண்டுகளாகும். அதன் பின், புதிய ரயில்கள் இயக்கப்படும்,” என்றார்.
தொடர்ந்து, கோவை மற்றும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னைக்கு ரயில்
தெற்கு ரயில்வே பொது மேலாளரை, கோவை தெற்கு மேம்பாட்டு கூட்டமைப்பினர் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். அதில், ‘போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் நடைபெறும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். விழாக்காலங்களில் போத்தனுாரில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன; நல்ல வரவேற்பு இருந்தது.
போத்தனுாரில் இருந்து சென்னை, கோவைக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்கள் இயக்க வேண்டும். போத்தனுார் – பரூணி இடையே, வாரந்திர ரயில் இயக்க வேண்டும். போத்தனுார் – தாம்பரம் ரயிலை நிரந்தரமாக்க வேண்டும்.
பெங்களூரு – எர்ணாகுளம், கோவை – மங்களூரு, எர்ணாகுளம் – காரைக்கால் ரயில்கள் போத்தனுாரில் ஒரு நிமிடம் நின்று செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply