கோவை: கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை, ஆய்வு அறிக்கை வந்தவுடன் உடனுக்குடன் அழிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட,1500 கிலோ கஞ்சா மூட்டைகளை எரித்து அழிக்க, போலீசார் நேற்று கொண்டு சென்றனர்.கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட இன்றியமையா பண்டங்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில், விசாரணை நடத்தப்படுகிறது.

போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்டவரிடம் இருந்து, கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை, ஆய்வுக்கு அனுப்பிய பிறகு, சிறப்பு நீதிமன்ற ஆவண பாதுகாப்பு அறையில் வைக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட வழக்கு சாட்சி விசாரணைக்கு வரும் போது, பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் கோர்ட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, நீதிபதி முன்னிலையில் சமர்ப்பிக்கப்படுகிறது.
வழக்கு தீர்ப்பு வரும் வரை, பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை அழிக்க முடியாது. கோர்ட் உத்தரவிட்ட பிறகே அழிக்க முடியும். இதனால், டன் கணக்கில் கஞ்சா மூட்டைகள் பாதுகாப்பு அறையில் அடுக்கி வைக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‘போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ‘சாம்பிள்’ எடுத்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.
ஆய்வு முடிவு வந்த பிறகு, அதற்கான ஆவணத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். சாட்சி விசாரணையின் போது ஆய்வு முடிவு அறிக்கையை சமர்ப்பித்தால் போதுமானது.
வழக்கில் தீர்ப்பு வரும் வரை, கைப்பற்றப்பட்ட போதை பொருளை பாதுகாத்து வைக்க தேவையில்லை. ஆய்வறிக்கை வந்தவுடன், போதை பொருளை அழித்து விடலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து, கோவை இ.சி., கோர்ட் ஆவண பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா மூட்டைகள், போலீசாரால் எடுத்து செல்லப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
கோவை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த வழக்குகளில், பறிமுதல் செய்யப்பட்ட 1,500 கிலோ கஞ்சா மூட்டைகள் அழிக்கப்படுகின்றன.
Leave a Reply