கோவை; மாநகரில் பெரும்பாலான சிக்னல்கள் பழுதடைந்து உள்ளதாக பொது மக்கள், வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் சிக்னல் கம்பங்கள் சாய்ந்தும், பழுதடைந்தும் காணப்படுவதால் சாலையோரங்களில், ஆபத்து காத்திருக்கிறது.கோவை மாநகர பகுதிகளில், தினசரி 4 லட்சம் பேர், சாலை போக்குவரத்து சிக்னல்களை பயன்படுத்தி வருகின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.

22 இடங்களில் சிக்னல்
காலை, மாலை வேளைகளில், ‘பீக் ஹவர்ஸ்’களில் சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை சரி செய்ய, மாநகரின் பெரும்பாலான இடங்களில் இருந்த சிக்னல்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக ‘ரவுண்டானா’ மற்றும் ‘யூ டர்ன்’கள் அமைக்கப்பட்டன. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. ஒரு சில இடங்களில், இதனால் பாதிப்பும் ஏற்படுகிறது.
தற்போது, மாநகரில் 22 இடங்களில் மட்டுமே சிக்னல்கள் செயல்பட்டு வருகின்றன. சிக்னல்கள் அனைத்தும், 2008ம் ஆண்டு செம்மொழி மாநாடு நடந்த போது அமைக்கப்பட்டவை. தற்போது, மாநகரில் உள்ள சிக்னல்கள் அனைத்தும், ‘உயிர்’ என்ற தனியார் அமைப்பு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
துருப் பிடித்து பழுது
செயல்பாட்டில் இருக்கும் சிக்னல்களில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சிக்னல்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. 17 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால், அனைத்து சிக்னல் கம்பங்களும் துருப் பிடித்து சரிந்து விழும் நிலையில் உள்ளன.
இது மட்டுமல்லாமல், ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகளை குழப்பும் வகையில் ஒரே நேரத்தில் இரண்டு விளக்குகளும் ஒளிர்கின்றன. சில நாட்களுக்கு முன், ஒப்பணக்கார வீதி, லாலா கார்னர் பகுதியில் இருந்த சிக்னல் கம்பம், சரிந்து விழும் நிலையில் இருந்தது. போக்குவரத்து போலீசார் உடனடியாக அகற்றினர்.
இது போல் பல இடங்களில், சிக்னல் கம்பங்கள் துருப்பிடித்து கீழே விழும் நிலையில் உள்ளன. எந்த நேரம் வேண்டுமானாலும், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தலையில் விழும் நிலையில் உள்ளன.
மாற்றுவதில் சிக்கல்
இந்நிலையில், ஒரு சில இடங்களில் பழைய சிக்னல்களுக்கு பதிலான நவீன சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், எல்.இ.டி., விளக்குகள் சிக்னல் கம்பங்கள் முழுவதும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்கள் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், மாநகரில் உள்ள அனைத்து சிக்னல்களையும் மாற்றி அமைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால், சிக்னல்கள் அனைத்தும் தனியார் அமைப்பால் பராமரிக்கப்பட்டு வருவதால், போலீசார் சிக்னலை மாற்றி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிக்னல்கள் கோளாறு, பழுது குறித்து போலீஸ் தரப்பில், சிக்னலை பராமரிக்கும் அமைப்பினருக்கு, ‘அறிக்கை’ அளித்த பிறகும், அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பழுதடைந்து கிடக்கும் சிக்னல் கம்பங்கள், பொது மக்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டாலோ, தவறாக காட்டும் சிக்னல் குறையீட்டால் வாகன விபத்து ஏற்பட்டாலோ, அப்பாவி மக்களின் உயிர் தான் பறிபோகும்.
எனவே போக்குவரத்து போலீசார், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து புதிய சிக்னல்கள் அமைக்க ஏற்பாடு செய்து, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
விபத்து தடுக்கும் கம்பம் விபத்து ஏற்படுத்துவதா!
போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, ‘பக்கத்து மாவட்டங்கள், சிறு மாவட்டங்களில் எல்லாம் சிக்னல்கள் புதுப்பிக்கப்பட்டு, நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கோவையில் 17 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அதே சிக்னல்கள் தான் தற்போது வரை உள்ளன. அதிலும் அனைத்தும் பழுதாகிவிட்டன. சிக்னல்களுக்குள் இருக்கும் எல்.இ.டி., விளக்குகள் பழுதாகிவிட்டன. சிக்னல்களை பராமரிக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம், இது குறித்து பல முறை தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டி, அமைக்கப்பட்ட சிக்னல்களால், விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
Leave a Reply