வெறிநாய் கடித்தால் என்ன செய்வது? உதவிக்கு ‘ரேபிஸ் ஹாட்லைன்’ எண் அறிமுகம்

கோவை; வெறிநோய் பாதிப்புக்கு உதவிபெறும் விதமாக, மாநகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ‘ரேபிஸ் ஹாட்லைன்’ எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களை துரத்துவதால், வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர். வெறிநோய் பாதிப்புள்ள நாய்கள் கடிக்கும் பட்சத்தில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் மட்டுமின்றி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் தெரு நாய்கள் கூட்டமாக கடித்து குதறும் சம்பவங்கள், பதைபதைக்க வைக்கிறது.தடுப்பூசி பணி விறுவிறு


பாதிப்புகளை கட்டுப்படுத்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த ஏப்., 17ம் தேதி முதல், வார்டு வாரியாக என்.ஜி.ஓ.,கள் அடங்கிய இரு அணிகள், வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.தினமும், 200 நாய்களுக்கு என, ஆறு மாதத்துக்குள் அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, உக்கடம், ஒண்டிப்புதுார் உட்பட நான்கு கருத்தடை சிகிச்சை மையங்களிலும் மாதம் தோறும், 1,200 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.

போன் செய்தால் அறியலாம்


இதுஒருபுறம் இருக்க, டவுன்ஹால் அரசு கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ‘ரேபிஸ் ஹாட்லைன்’ எண் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, 98437 89491 என்ற எண்ணில் வெறி நாய் கடி, கடித்த பின்பு செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை உள்ளிட்ட தகவல்களை பெறலாம். இன்னும், 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘பத்து ஆண்டு இலக்கு’

மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் பூபதியிடம் கேட்டபோது,”முதற்கட்டமாக காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை இந்த ஹாட்லைன் சேவை வழங்கப்படும். படிப்படியாக, 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும். வெறிநோய் பாதித்த நாய்கள் குறித்து தகவல் அளித்தால், அதை பிடித்து தடுப்பூசி செலுத்தப்படும். கடி வாங்கியவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை, மருத்துவமனை குறித்த விவரங்கள் அளிக்கப்படும். 10 ஆண்டுகளுக்குள் ரேபிஸ் நோய் பாதிப்பை, முழுமையாக கோவையில் கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.