கோவை: பாலக்காடு கோட்டத்தின் கோரிக்கைக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும் போது, சேலம் கோட்டத்துக்கு ஒப்புதல் வழங்காத, தெற்கு ரயில்வேயின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயில், அதிக வருவாய் ஈட்டித் தரும் ரயில்வே ஸ்டேஷனாக, கோவை ரயில்வே ஸ்டேஷன் இருந்து வருகிறது. ஆனால், கோவை மக்களின் கோரிக்கைகளுக்கு எப்போதும் தெற்கு ரயில்வே செவிசாய்ப்பதில்லை.
சேலம் கோட்டத்தின் அருகில் உள்ள, பாலக்காடு கோட்டம் சார்பில் விடுக்கப்படும், அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், கோவை சார்பில் விடுக்கப்படும் அத்தியாவசிய தேவைகள் கூட நிராகரிக்கப்படுவதாக, ரயில்வே அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இது குறித்து, போத்தனுார் ரயில் பயனர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது:
பாலக்காடு ரயில்வே கோட்டம் விடுக்கும், எந்த ஒரு கோரிக்கையும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் விரைந்து செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில், கோழிக்கோடு – பாலக்காடு இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை விடப்பட்டது.
அதை செயல்படுத்த உடனடியாக தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. புதிய ரயில்கள் தவிர, சிறப்பு ரயில்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இது தவிர, ரயில்கள் நீட்டிப்பும் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்ட, பல ரயில்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. ஆனால், கோவையில் இருந்து விடுக்கப்படும், எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படுவதில்லை. ரயில்களை நிறுத்த கோரிக்கை விடுத்தால் கூட நிறைவேற்றுவதில்லை.போத்தனுார் – திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் முடிந்து, பல ஆண்டுகள் ஆகியும் இன்னும், கோவையிலிருந்து ராமேஸ்வரம், துாத்துக்குடி, கொல்லம், போடிநாயக்கனுார், ரயில்கள் இயக்கம் துவங்கப்படவில்லை.
தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கை, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அதில், கேரள மக்களின் ரயில்வே தேவைகள் நிறைவேற்றப்படுவது சரியே என்றாலும், கோவையின் ரயில்வே தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவையில் இருந்து விடுக்கப்படும், எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படுவதில்லை. ரயில்களை நிறுத்த கோரிக்கை விடுத்தால் கூட நிறைவேற்றுவதில்லை. போத்தனுார் – திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் முடிந்து, பல ஆண்டுகள் ஆகியும் இன்னும், கோவையிலிருந்து ராமேஸ்வரம், துாத்துக்குடி, கொல்லம், போடிநாயக்கனுார், ரயில்கள் இயக்கம் துவங்கப்படவில்லை.
Leave a Reply