கோவை; கோவையில், அனைத்து கட்டட உரிமையாளர்களுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வரி புத்தகம்வழங்கப்படுகிறது. இணைப்பே கொடுக்காத வீடுகளுக்கும் புத்தகம் வழங்கியிருப்பதால், மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.கோவை மாநகராட்சியில், 5.92 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். ஆனால், 1.16 லட்சம்பாதாள சாக்கடை இணைப்புகளே வழங்கப்பட்டுள்ளன. அதனால், அனைத்து கட்டடங்களுக்கும் கட்டாயம் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க, பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக குழாய் பதிக்கும் இடங்களில், உடனுக்குடன் வீட்டு இணைப்பு வழங்கப்படுகிறது.
‘இணைப்பு வேண்டாம்’ என, கட்டட உரிமையாளர்கள் கூறினாலும், மாநகராட்சி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

அதனால், சில இடங்களில் வேண்டா வெறுப்பாக இணைப்பு பெறப்படுகிறது. இணைப்பு பெற்றவர்களுக்கு கட்டடத்தின் பரப்பை சதுரடியில் கணக்கிட்டு, லட்சக்கணக்கில் பணம் செலுத்த சொல்லப்படுகிறது. அத்தொகையை பார்த்து, கட்டட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
வீதி வீதியாக சென்று, ஒவ்வொரு கட்டட உரிமையாளருக்கும் பொறியியல் பிரிவு வாயிலாக, பாதாள சாக்கடை புத்தகம் வழங்கப்படுகிறது. ஒரு வளாகத்தில் நான்கு குடியிருப்புகள் இருந்தால், நான்கு சொத்து வரி புத்தகம் போடப்பட்டு இருக்கும். அதேநேரம், ஒரே ஒரு பாதாள சாக்கடை இணைப்பு மட்டுமே பெறப் பட்டு இருக்கும். இருந்தாலும், தற்போதைய உத்தரவுப்படி, நான்கு வீடுகளிலும் பாதாள சாக்கடை கட்டணம் வசூலிக்க தனித்தனியாக வரி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
அடுக்குமாடி குடியிருப்பில், 100 வீடுகள் இருந்தால், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக புத்தகம்வழங்கப்படுகிறது. அதன்படி, வீடு வீடாகச் சென்று புத்தகம் வழங்கும் பணியில், உதவி/ இளம் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சில வார்டுகளில் தற்போது தான் குழாய் பதிக்கும் பணியே நடந்து வருகிறது. இருந்தாலும், வீடுகளுக்கு புத்தகங்கள் வழங்குவதால், பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையறிந்த ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி நிர்வாகம் மீது கோபத்தில் உள்ளனர். பாதாள சாக்கடை புத்தகம் வழங்குவதை நிறுத்தச் சொல்லி, அதிகாரிகளிடம் மன்றாடி வருகின்றனர்.
‘சில பகுதிகளில் தவறு’
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ”பாதாள சாக்கடை இணைப்பு பெற்றவர்களுக்கு, வீடு தோறும் வரி புத்தகம் வழங்கப்படுகிறது. இணைப்பு இல்லாதவர்களுக்கு வழங்கி இருந்தால், மாநகராட்சி அலுவலகத்தில் திருப்பிக் கொடுத்து விடலாம். இணைப்பு இல்லாதவர்கள் இணைப்பு பெறுவது அவசியம். சில பகுதிகளுக்கு தவறுதலாக, 2014 முதல் கட்டணம் நிர்ணயித்து, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதி அமலுக்கு வந்த நாளில் இருந்து, கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு விதித்துள்ள கட்டணங்கள் நீக்கப்படும்,” என்றார்.
Leave a Reply