கோவை; கெம்பட்டி காலனி பகுதியில் வீட்டு முன் நின்று கொண்டிருந்த சிறுமி மீது, லோடு ஆட்டோ மோதியதில் சிறுமி உயிரிழந்தார்.அறிவொளி நகரை சேர்ந்த பாலன், சாவித்திரி தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் காவியாவிற்கு திருமணமாகி தனது கணவர் ராஜேந்திரனுடன் கெம்பட்டி காலனியில் வசித்து வருகிறார். ராஜேந்திரன் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். மூன்றாம் மகள் சவுமியா 13; கெம்பட்டி காலனி, ஒக்கிலியர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
மாநகராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றும் சாவித்திரி, தினமும் சவுமியாவை பள்ளிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் சவுமியாவை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு, கெம்பட்டி காலனி, எல்.ஜி., தோட்டத்தில் உள்ள சாவித்திரியின் பாட்டி வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்து அறிவொளி நகரில் உள்ள தங்களது வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். ஷேர் ஆட்டோ பிடிப்பதற்காக சவுமியா மற்றும் அவரது தாய் இருவரும், நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ, சவுமியா மீது மோதி அவரை சிறிது துாரம் இழுத்து சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த சவுமியா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்த போது, ராஜேந்திரன், ஓட்டுநர் உரிமம் இல்லாத அவரது நண்பரான கண்ணனுக்கு வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்கும் போது, விபத்து நடந்தது தெரியவந்தது. இருவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply