பொள்ளாச்சி; கொப்பரை, தேங்காய் உற்பத்தி குறைவால், 15 கிலோ ஒரு டின் தேங்காய் எண்ணெய், 6,050 ரூபாயாக உயர்ந்தது. பண்டிகை நாட்கள் நெருங்குவதால் மேலும் கொப்பரை, தேங்காய் விலை உயர வாய்ப்புள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற பயிர்களை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி தேங்காய், கொப்பரை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தவித்து வந்தனர். வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால், நடப்பாண்டு தேங்காய் உற்பத்தி குறைந்தது. இதனால், தேங்காய் விலை வேகமாக உயர்ந்தது. கொப்பரை உற்பத்திக்கு ஏற்ப தேங்காய் வரத்து இல்லாததால், பெரும்பாலான உலர்களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில், தேங்காய், கொப்பரை உற்பத்தி குறைவால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின், தேங்காய் எண்ணெய், கொப்பரை, தேங்காய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், பவுடர் விலையும் உயர்ந்துள்ளது.
கொப்பரை, தேங்காய் உற்பத்தி குறைந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு தேங்காய் விலை உயர்ந்துள்ளது.காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, ஒரு கிலோ சாதாரண கொப்பரை, 255 ரூபாயாகவும், ஸ்பெஷல் கொப்பரை, 260 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
ஒரு டன் பச்சை தேங்காய், 75 ஆயிரம், கருப்பு தேங்காய், 80 ஆயிரம் ரூபாயாகவும், ஒரு கிலோ தேங்காய் பவுடர், 325 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
தேங்காய் எண்ணெய் டின் (15 கிலோ), 6,050 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:தமிழகத்தில் தேங்காய் சீசன் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால், இந்தாண்டு உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.
வரும் ஆக., மாதம் முதல் கர்நாடகாவில் இருந்து வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கேயும் இளநீர் விலை அதிகரிப்பால், இளநீராக வெட்டப்பட்டது. மேலும், நோய் தாக்குதல் பிரச்னையால் அங்கும் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் தேங்காய் சீசன் ஏற்கனவே நிறைவடைந்தது. இந்நிலையில், தென்மாநிலங்கள் அனைத்துக்கும் தமிழக தேங்காய் மட்டுமே மூலதனமாக உள்ளது.
இதே நிலை நீடித்தால் ஓணம் போன்ற பண்டிகை சீசனில், ஒரு டன் தேங்காய் 90 ஆயிரம் ரூபாய்க்கு விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு, கூறினார்.
நேரடி விற்பனைக்கு கோரிக்கை!
விவசாயிகள் கூறியதாவது:விவசாயிகளிடம் இருந்து, தேங்காய் எண்ணிக்கை அடிப்படையிலும், எடை அடிப்படையிலும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். எண்ணிக்கை அடிப்படையில் வாங்கும் போது, ஆயிரம் தேங்காய்க்கு, 20 தேங்காய் லாபக்காய் என்ற கணக்கிலும், 20 தேங்காய் கழிவு என்ற கணக்கிலும் எடுத்துக்கொள்கின்றனர். மேலும், தேங்காய்க்கும் குறைவான விலை நிர்ணயம் செய்கின்றனர்.எடை கணக்கில் தேங்காய் வாங்கும் போதும், மார்க்கெட் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்கின்றனர். இதனால், இடைத்தரகர், வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. உற்பத்தி பாதித்த நிலையில், இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு பலன் கிடைப்பதில்லை.இதை தவிர்க்க, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், கொப்பரை விற்பனையுடன், நேரடியாக தேங்காய் விற்பனையை துவங்க வேண்டும். இதனால், விவசாயிகளுக்கு நேரடி பலன் கிடைக்கும்.இவ்வாறு, கூறினர்.
Leave a Reply