மாரடைப்பால் மயங்கிய முதியவர்; காப்பாற்றிய ‘ஹீரோ’ வுக்கு பாராட்டு

கோவை; மாரடைப்பால் மயங்கிய முதியவருக்கு, முதலுதவி செய்து காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.கோவை ரயில்வே ஸ்டேஷனில், ரயில்கள் வரும் போதும், புறப்படும் போதும் பயணிகளின் நடவடிக்கைகளை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன், கோவை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் எண், 1 ல் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவின் ஹெட்கான்ஸ்டபிள் சதீஸ், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, அங்கு அமர்ந்திருந்த முதியவர் ஒருவர், நெஞ்சு வலியால் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த சதீஸ், அவரை மீட்டு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உகேந்திரகுமாருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வரும்வரை காத்திருக்காமல், சதீஸ் முதியவருக்கு சி.பி.ஆர்., முதலுதவி மேற்கொண்டார். அவருடன் கான்ஸ்டபிள் ரினீஸ் இணைந்து, சி.பி.ஆர்., முதலுதவியை வழங்கினார். இதையடுத்து, மயக்கமடைந்த முதியவருக்கு நினைவு திரும்பியது.

தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக முதியவர், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் முதியவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி தோடப்பட்டியை சேர்ந்த சங்கர் எனத் தெரிந்தது. மேட்டுப்பாளையம் செல்ல பயணிகள் ரயிலுக்காக காத்திருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியது தெரிந்தது. தொடர் சிகிச்சைக்கு பின், முதியவர் உடல்நலம் தேறி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு, முதியவரின் உயிரை காப்பாற்றிய சதீஸ் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.