‘செல்ல வேண்டிய பாதையும் அவரே நாம் சேர வேண்டிய இடமும் அவரே!’

கோவை; கோவை பாரதீய வித்யாபவன் சார்பில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, பாரதீய வித்யா பவன் அரங்கில் நேற்று நடந்தது.இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது:

இந்த உடல் அழியும் தன்மை உடையது. ஆத்மா அழிவற்றது. ஆத்மாவுக்கு அணு சொரூபன், நித்யன் என்று பெயர். ஆத்மாவின் தன்மை என்ன? ஆத்மா என்பவர் யார் என்றால், ஆத்ம ஞானம் உடையவர், ஆனந்தமே உருவானவர், அணுவிலும் சிறியவர்.

இந்த சரீரம் மாறிக்கொண்டே இருக்கும், விகாரமடையும். ஆனால் ஆத்மா விகாரமடையாது. இந்த உடல் பகவானால் படைக்கப்பட்டது.இந்த உலகத்தின் நன்மைக்காக, பகவான் இந்த உடலை கொடுத்து இருக்கிறார். இந்த உண்மையை தெரிந்து கொண்டு, நமக்கும் நன்மை செய்து கொள்ள வேண்டும்.

பிறருக்கும் நன்மைகள் செய்ய வேண்டும். பகவானுக்கும், பகவானின் அடியார்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். பகவானுக்கு தொண்டு செய்வதுதான் நம்முடைய கடமை.

பகவான் ஒருவரே நிரந்தரமானவர். அனைவரையும் அவரே தாங்கி நிற்கிறார். அவரிடம் சரணாகதி அடைய, அவரே பாதையை உருவாக்கி தருகிறார்.

பாதையும் அவரே; சேர வேண்டிய இடமும் அவரே. அவர் காட்டும் வழியை பற்றிக் கொண்டு பகவானின் திருவடியில் சரணாகதி அடைவதுதான் நம் பாக்கியம்.

இவ்வாறு, அவர் பேசினர்.