கண் சிமிட்டாத கேமராக்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்; பராமரித்தால் சிக்கல் தீரும்

போலீஸ் நடவடிக்கைகளுக்கு, கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வங்கிகள், மருத்துவமனை, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ‘காவலர்’ போன்று செயல்படுகின்றன. தற்போது, கிராம பகுதி ரோடுகளிலும், தனிநபர் வீடுகளிலும் காண்காணிப்பு கேமரா பொருத்துவது அத்தியாவசியமாகி விட்டது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகாக்களில், சாலைகளில் போக்குவரத்து விதிமீறி செல்லும் வாகனங்கள், ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்கள், ‘நோ பார்க்கிங்’ பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், நெரிசல் மற்றும் சிறு குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, போலீசார் சார்பில் முக்கிய சந்திப்பு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், பஸ் ஸ்டாண்ட், குடியிருப்பு பகுதிகளில், ‘ஸ்பான்சர்’ வாயிலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையில் உள்ள ‘டிவி’க்கள் வாயிலாக கண்காணிக்கப்பட்டும் வந்தன. தற்போது, பல இடங்களில் கேமராக்கள், பயன்பாடின்றி காணப்படுகின்றன. சில இடங்களில் கேமராக்கள் உடைந்து தொங்குகின்றன. இதனால், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கண்காணிப்பு கேமராக்களை சீரமைப்பதில் தொய்வு காணப்படுகிறது. கேமராக்கள் செயல்படாததை அறிந்து, குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு தைரியம் ஏற்படும். பயன்பாடு இல்லாத கேமராக்களுக்கு மாற்றாக, புதிய கேமரா பொருத்த வேண்டும்.

அனைத்து கேமராக்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தால் தான், குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் உதவும்.கிணத்துக்கடவு


கிணத்துக்கடவில், மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட் இரு புறங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.

ஆனால், பெரும்பாலான பகுதியில் இருந்து அகற்றப்பட்ட கேமராக்கள், பல நாட்களாக பொருத்தப்படாமல் உள்ளன. கொண்டம்பட்டி ரோட்டில், பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் ஒன்று, கழன்று காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்கிறது. இதை கவனித்து விரைவில் சரி செய்ய வேண்டும்.

வால்பாறை


வால்பாறை நகரில் உள்ள, போலீஸ் ஸ்டேஷன், நகராட்சி அலுவலகம், அரசு கல்லுாரி, வர்த்தக நிறுவனங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தாலுகா அலுவலகம், வட்டார கல்வி அலுவலர் அலுவலகம், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், கேமராக்கள் பொருத்தப்படவில்லை.

போலீஸ் ஸ்டேஷன் சார்பில், 32 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தற்போது விரல் விட்டு எண்ணும் அளவிலேயே கேமராக்கள் செயல்படுகின்றன. அரசு அலுவலகங்களில் கேமரா பொருத்தப்படாததால், தவறுகள் அதிகளவில் நடக்கிறது.

விரைவில் சீரமைக்கப்படும்!

போலீசார் கூறியதாவது:பொள்ளாச்சி உட்கோட்டத்தில், சி.சி.டி.வி., நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன், 200 கேமராக்களை ஒரே இடத்தில் இணைத்து கண்காணிப்பு செய்யப்படுகிறது.மேலும், பொள்ளாச்சி கிழக்கு, தாலுகா, மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 100 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.நகரத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களின் பதிவெண் பதிவு செய்யும் வகையில், ஐந்து ஏ.என்.பி.ஆர்., (ஆட்டோமெட்டிக் நம்பர் பிளேட் ரெக்கார்டு) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொள்ளாச்சி – கோவை, பொள்ளாச்சி – பழநி, திருப்பூர் என அனைத்து வழிகளிலும் இந்த கேமராக்களின் வாயிலாக கண்காணிப்பு செய்யப்படுகிறது. பராமரிப்பு இல்லாத கேமராக்கள் விரைவில் சீரமைக்கப்படும். கிராமங்களிலும் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.வால்பாறையில், கண்காணிப்பு கேமராக்களை, குரங்குகள் சேதப்படுத்துகின்றன. ஒயர்கள் அறுந்த நிலையில் செயல்படாமல் உள்ள கேமராக்கள் விரைவில் சரி செய்யப்படும். காமராஜ்நகர் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரையிலும், விடுபட்டுள்ள கடைகள், காட்டேஜ்களில் கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.