கஞ்சா வழக்கில் ஜாமின் பெற்றவர்களை இப்படி தப்ப விடலாமா? 252 பேருக்கு ‘பிடிவாரன்ட்’ பிறப்பிப்பு

கோவை: கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் சென்ற, 252 பேர் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானதால், அவர்களுக்கு ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில், பதிவு செய்யப்படும், கஞ்சா, அபின், கோகைன், மெத்தபெட்டமின் போன்ற போதை பொருள் கடத்தல் வழக்குகள், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள, இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (இ.சி.,கோர்ட்) தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது.

நிலுவை வழக்கு அதிகரிப்பு


போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அந்தந்த மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.

போதை பொருள் கடத்தல் வழக்குகள், ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

கடந்த ஜூன் 30 வரை, கோவை இ.சி., கோர்ட்டில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட, 717 வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

வழக்கில் கைதானவர்கள், ஜாமினில் விடுவிக்கப்பட்டால், கோர்ட்டில் ஆஜராக வாய்தா போடப்படுகிறது. சாட்சி விசாரணை துவங்க, குற்றம் சாட்டப்பட்ட நபர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால், இவர்களில் பலர் ஆஜராவதில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் தலைமறைவான நபர்கள் மீது, ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்படுகிறது.

கோவை இ.சி., கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத 252 பேருக்கு ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீசார் திணறல்


அவர்களை மீண்டும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் தேடி செல்லும் போது, தப்பி விடுகின்றனர். அவர்கள் கொடுத்த முகவரியை விட்டு, வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து விடுவதால், கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டாலும், தமிழக போலீசார், அவர்கள் சொந்த மாநிலத்திற்கு சென்று முகவரி கண்டுபிடித்து, மீண்டும் கைது செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இது போன்ற வழக்குகளில், அடிக்கடி வாய்தா போடப்படுவதால் விசாரணை முடங்குகிறது.

இது குறித்து, அரசு தரப்பு வக்கீல் சிவகுமார் கூறியதாவது:

போதை பொருள் கடத்தல் வழக்கில், ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டும், ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நபர்களை தேடி கண்டுபிடிப்பது, போலீசாருக்கு சவாலாக உள்ளது. குறிப்பாக, ஒடிசா, பீகார், அசாம், உ.பி., உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த, தலைமறைவு கைதிகளை பிடிக்க போலீசார் சென்றால், அவர்கள் நிரந்தரமாக முகவரி மாறி சென்று விடுகின்றனர். இதனால் வழக்குகளில் மேற்கொண்டு, சாட்சி விசாரணை நடத்த முடியாமல், வாய்தா போடப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

2,900 வழக்குகள் நிலுவை


கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் கடந்த ஜூன் வரை, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்ட, 2,190 வழக்குகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல், புலன் விசாரணை நிலையில் உள்ளன. மொத்தமாக, 2,907 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாட்சி விசாரணை நடந்து வரும் வழக்குகளில், 48 பேர் சிறையில் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில், 6 வழக்குகளும், ஐந்தாண்டுக்கு மேல் நிலுவையில், 130 வழக்குகளும் உள்ளன.