குண்டுவெடிப்பு கைதிக்கு 5 நாட்கள் ‘போலீஸ் கஸ்டடி’

கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், 28 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்ட பயங்கரவாதியை போலீஸ் காவலில் விசாரிக்க, கோர்ட் அனுமதி அளித்தது.கோவையில், கடந்த 1998, பிப்.,14 ல், நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் படுகாயமடைந்தனர். வழக்கு தொடர்பாக, அல்-உம்மா தலைவர் பாஷா, அன்சாரி உள்ளிட்ட, 156 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது கோவை தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
பாஷா உள்ளிட்ட 42 பேருக்கு ஆயுள் சிறையும், 106 பேருக்கு, ஏழு ஆண்டுக்கு மேற்பட்ட சிறை தண்டனையும் அளிக்கப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான், டெய்லர் ராஜா ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இவர்களை பிடிக்க தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில், கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியில் வசித்த டெய்லர் ராஜாவை,51, கைது செய்து கடந்த 11ம் தேதி கோவை ஜே.எம்:5, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

டெய்லர் ராஜாவிடம், 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, ஜே.எம்:5, கோர்ட்டில், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். மாஜிஸ்திரேட் வெர்ஜின் வெர்ஸ்டா முன்னிலையில், பலத்த பாதுகாப்புடன் டெய்லர் ராஜாவை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

டெய்லர் ராஜாவிடம், ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். விசாரணைக்கு பிறகு, வரும் 21ம் தேதி மாலை 5:00 மணிக்குள் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.