நீலாம்பூர் – மதுக்கரை ஆறுவழி சாலையாகிறது: ரூ.1,200 கோடிக்கு அறிக்கை தயாரிப்பு

கோவை; கோவையில், நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை யிலான புறவழிச்சாலையை, 1,200 கோடி ரூபாய் மதிப்பில் ஆறுவழி சாலையாக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது.சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் கொச்சி சாலை, நீலாம்பூர் அருகே கடக்கிறது. சேலத்தில் இருந்து நீலாம்பூர் வரை ஆறுவழி சாலையாகவும், மதுக்கரை முதல் வாளையார் வரை நான்கு வழியாகவும் உள்ளது.

இடைப்பட்ட, நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான, 28 கி.மீ., சாலை இருவழிச் சாலையாக, 10 மீட்டர் அகலத்தில் உள்ளது. இவ்வழித்தடத்தை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன.

அடிக்கடி நிகழும் விபத்துகளால் உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. அதனால், அச்சாலையை அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்திடம் இருந்த இச்சாலையை, இழப்பீடு வழங்கி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக, ஐந்து இடங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. அச்சாலையை ஆறுவழியாக அகலப்படுத்த ஆணையம் முடிவெடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது.

ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘புறவழிச்சாலை விஸ்தரிக்கப்படும் இடங்களில் எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டுமென ஆய்வு செய்கிறோம்.

‘விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்ய ஆறு மாதங்களாகும். 32 இடங்களில் சுரங்கப் பாதை அமையும்; இரு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப் படும். உத்தேசமாக, 1,200 கோடி ரூபாய் தேவைப்படும்’ என்றனர்.