கோவை; கோவை அரசு பள்ளிகளில் உள்ள பெரும்பாலான காலிப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால், கூடுதல் தேவை பணியிடங்கள் (நீடு போஸ்ட்) நிரப்பப்படாமல் உள்ளன.இதனால், தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள் ஒரே வகுப்பில் இணைக்கப்பட்டு, கணிதம் போன்ற பாடங்கள் இரு மொழிகளிலும் ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில், 212 காலிப்பணியிடங்கள் பட்டியலிடப்பட்டன. 30 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த கலந்தாய்வில், பெரும்பாலானோர் ஏற்கனவே இருந்த காலிப்பணியிடங்களைத் தேர்வு செய்தனர். கூடுதல் தேவை பணியிடங்களை, காலிப்பணியிடங்களாக அறிவிக்காததால்பல அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்கிறது.இதனால், மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக அறிவிக்கப்படும் திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. டாக்குமெண்ட் ரெக்கார்டு பதிவிற்காக திட்டங்களை செயல்படுத்தும் சூழலுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் தள்ளப்படுகின்றனர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சரவணகுமார் கூறுகையில், “தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கூடுதல் தேவைபணியிடங்கள் உள்ளன. கோவையில் மட்டும் 200க்கும் மேற்பட்டபணியிடங்கள் உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
பள்ளிகளில் ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களுடன், கூடுதல் தேவைபணியிடங்களுக்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
ஆனால், கூடுதல் தேவைபணியிடங்களை அரசு அளவுப் பட்டியலில் சேர்க்காமல் இருப்பதால், அவை நிரப்பப்படுவதில்லை. பல பள்ளிகளில், 5 பேர் செய்ய வேண்டிய பணியை ஆசிரியர்கள் பகிர்ந்து செய்து வருகின்றனர்” என்றார்.
Leave a Reply