பொள்ளாச்சி: ‘தினமலர்’ நாளிதழின் மாணவர் பதிப்பான, ‘பட்டம்’ இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், ‘பதில் சொல் — பரிசை வெல்’ மெகா வினாடி — வினா போட்டி, பொள்ளாச்சி பாரதிய வித்யா மந்திர் மெட்ரிக் (பி.வி.எம்.,) மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மாணவர்களின் கற்றல் ஆர்வம் மற்றும் நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, ‘தினமலர்’ நாளிதழ் ‘பட்டம்’ இதழ் சார்பில், மெகா வினாடி — -வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு போட்டியானது, ‘தினமலர்’ நாளிதழின், ‘பட்டம்’ மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- – வினா போட்டிக்கு, ‘சத்யா ஏஜென்சிஸ்’ மற்றும் ‘ஸ்போர்ட்ஸ் லேண்ட்’ நிறுவனங்கள், ‘கிப்ட் ஸ்பான்சர்’களாக இணைந்துள்ளன.

இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப் போட்டியில் பங்கேற்பர்.பொள்ளாச்சி பாரதிய வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வினாடி — வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 210 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான பள்ளி இறுதி போட்டியில், ‘பி’ அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற 9ம் வகுப்பு மாணவர் தியானேஷ்வர்சாய், 8ம் வகுப்பு மாணவர் ஜெரிஷ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் பிரேமானந்தி, ஒருங்கிணைப்பாளர் பார்வதி, ஆசிரியர்கள் திலகரத்தினம், பிரீத்தி ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். ‘பட்டம்’ இதழ்அனைவருக்குமானது பள்ளி முதல்வர் பிரேமானந்தி கூறுகையில், ‘தினமலர் – பட்டம்’ இதழ் மாணவர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் உள்ளது. கல்வி, அறிவியல், பொதுஅறிவு, விளையாட்டு என, பல்வேறு தகவல்களை உள்ளடக்கி வெளிவரும் சிறந்த பதிப்பாக உள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. மாணவர்கள் புதுப்புது விஷயங்களையும், அரிய தகவல்களையும் ‘பட்டம்’ இதழ் வாயிலாக தெரிந்து கொள்கின்றனர்,’ என்றார்.
பொதுஅறிவு பெட்டகம்!
மாணவர் தியானேஸ்வர்சாய்: கடந்த நான்கு ஆண்டுகளாக ‘பட்டம்’ இதழ் படித்து வருகிறேன். தினமும் பல புதிய தகவல்களை வெளியாகி வருவதால் அதனை படிக்க ஆர்வம் துாண்டுகிறது. கல்விக்கு அப்பாற்பட்ட சிறந்த பொக்கிஷமாக ‘பட்டம்’ இதழ் உள்ளது.கல்வி அறிவுடன், பொதுஅறிவையும் மேம்படுத்திக் கொள்ள ‘பட்டம்’ இதழ் கைகொடுக்கிறது. மாணவர் ஜெரிஷ்: பட்டம் இதழை, தினமும் ஆர்வத்தோடு படிப்பேன். பாடம் சம்பந்தமான சிறு, சிறு செய்திகளும் அதில் உள்ளதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தகவல் உள்ளன. அவ்வகையில், இறுதி போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் நோக்கில் ‘பட்டம்’ இதழை தொடர்ந்து படித்து வருகிறோம்.







Leave a Reply