ஈஷா நிகழ்ச்சி.. கோவை வந்த அமித்ஷாவிற்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு.. இரண்டு நாள் பிளான்

கோவை: நாளை நடைபெற உள்ள ஈஷா நிகழ்ச்சி மற்றும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித்ஷாவை வருகையையொட்டி, கோவை மாநகர பகுதியில் 3 ஆயிரம் போலீசார், புறநகர் பகுதியில் 4 ஆயிரம் போலீசார் என்று மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை பீளமேடு பகுதியில் பா.ஜனதா அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா கோவை வந்துள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் கோவை வந்த அமித்ஷாவுக்கு கட்சி நிர்வாகிகள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.அங்கு இன்று இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.

நாளை(புதன்கிழமை) காலையில் பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. அதைத்தொடர்ந்து அவர், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த கூட்டம் முடிந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக நாளை மாலை 4 மணியளவில் நட்சத்திர விடுதியில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து அவர், ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையம் செல்ல இருக்கிறார். அங்கு அவருக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்பு அளிக்க உள்ளார். இதையடுத்து அவர் அங்குள்ள தியான லிங்கம் இருக்கும் இடத்துக்கு சென்று லிங்க பைரவியை அமித்ஷா வழிபடுகிறார். பின்னர் சிவராத்திரி விழா நடைபெறும் ஆதியோகி சிலை இருக்கும் இடத்துக்கு கார் மூலம் அமித்ஷா செல்கிறார். அங்கு நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்ததும் அமித்ஷா ஈஷா மையத்தில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
மறுநாள்(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்துக்கு சென்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா, கோவை வருகையையொட்டி கோவை மாநகர பகுதியில் 3 ஆயிரம் போலீசார், புறநகர் பகுதியில் 4 ஆயிரம் போலீசார் என்று மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீதவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.