கோவை: கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. அதன்படி பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக மாநகருக்குள் வாகனங்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மருதமலை ரோடு தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. சுக்கிரவார்பேட்டை சாலையில் இருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜவீதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக மாநகருக்குள் வாகனங்கள் வர தடை செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில் வலது புறம் திரும்பி அசோக்நகர் ரவுண்டானா, பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் சென்று செல்ல வேண்டும். வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் பைபாஸ் சாலை, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டை அடைந்து செல்லலாம். மருதமலை ரோடு தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அந்தப் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம் புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு செல்வபுரம் மாநகராட்சி பள்ளி வழியாக செல்லலாம்.
உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக தடாகம் ரோடு, மருதமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னையராஜபுரம் வழியாக தடாகம் சாலையை அடைந்து செல்லலாம். சுக்கிரவார்பேட்டை சாலையில் இருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜவீதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மாநகருக்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாளை ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை. இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர் செல்லும் போது பட்டாசு மற்றும் வெடிகள் வெடிக்கக்கூடாது. பக்தர்கள் அதிக ஒலியை எழுப்பக் கூடிய ஊதுகுழல்களை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர யாரும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தேரை நெருங்கக்கூடாது. அப்படி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply