பஸ் ஸ்டாண்டு வாகன நிறுத்துமிடத்தில் தினமும் நடக்குது கட்டண கொள்ளை; மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை

கோவை: காந்திபுரத்தில் உள்ள டவுன் பஸ் ஸ்டாண்ட்இரு சக்கரவாகன நிறுத்துமிடத்தில், நாளொன்றுக்கு, 40 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக தொகை என்பதால், வாகன ஓட்டிகளுக்கும், ஸ்டாண்ட்டில் இருப்பவர்களுக்கும் இடையே, தினமும் வாக்குவாதம் ஏற்படுகிறது.கோவை, காந்திபுரத்தில் டவுன் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மாநகராட்சியின் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் செயல்படுகிறது. ஆறு மணி நேரத்துக்கு, 5 ரூபாய், 12 மணி நேரத்துக்கு 10 ரூபாய், 24 மணி நேரத்துக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டது.கடந்தாண்டு ஏப்., 1 முதல் கட்டண விகிதம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, இரண்டு மணி நேரத்துக்கு, 10 ரூபாய், அதன் பின், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா, 5 ரூபாய் வீதம் வசூலிக்க மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Latest Tamil News

வாகனஓட்டிகள் அதிர்ச்சி

இக்கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு கொண்டு சென்றதும், உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்களை நிறுத்தி வைக்க, வாய்மொழியாக அறிவுறுத்தினார் .அதற்கு பதிலாக, 12 மணி நேரத்துக்கு, 20 ரூபாய் வீதம் நாளொன்றுக்கு, 40 ரூபாய் வசூலிக்கின்றனர். வாகனத்தை எடுக்க வரும்போது, நாள் கணக்கில் கணக்கிட்டு பணம் வாங்குகின்றனர்.

அறிவிப்பு பலகை ‘அம்போ’

நாட்களை கணக்கிடும்போது முறைகேடு செய்கின்றனர். இரவு, 12:00 மணி வரை ஒரு நாளாகவும், இரவு, 12:00 மணிக்கு பின், இன்னொரு நாளாகவும் கணக்கிட்டு, ஒவ்வொரு வாகனத்துக்கும் கூடுதலாக ஒரு நாள் வாடகை சேர்த்து வசூலிக்கின்றனர்.
வாகனம் நிறுத்துமிடத்தில் கட்டண விகிதங்கள் தொடர்பாக, அறிவிப்பு பலகையில் தொகை குறிப்பிட்டிருக்கும் பகுதி கிழிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், ஸ்டாண்ட்டில் இருப்போருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே, தினமும் வாக்குவாதம் ஏற்படுகிறது.கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய, மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

சேதமடையும் வாகனங்கள்

வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘நாளொன்றுக்கு, 40 ரூபாய் வசூலிக்கின்றனர். 10ம் தேதி காலை, 7:30 மணிக்கு வாகனம் நிறுத்தப்பட்டது; 13ம் தேதி காலை, 7:00 மணிக்கு வாகனத்தை எடுக்கிறோம். தேதி மற்றும் நேரத்தை கணக்கிட்டால், மூன்று நாட்களே ஆகின்றன. ஆனால், தேதியை அடிப்படையாக வைத்து, நான்கு நாட்கள் என கூறி, கட்டணம் வாங்கினர். நாங்கள் நிறுத்துமிடத்தில் வாகனம் இருப்பதில்லை; இஷ்டத்துக்கு வேறிடத்தில் நகர்த்தி வைக்கின்றனர். வாகனங்கள் ‘டேமேஜ்’ ஆகின்றன’ என்றனர்.