நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், (17.03.2025) நடைபெற்ற மக்கள்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்
லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை
பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 171 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள்
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை
அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட
ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், கடந்த 18.02.2025 அன்று நடைபெற்ற
கலைத்திருவிழா என்ற பெயரில் விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில்,
வெற்றிப் பெற்ற முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த 27 மாணாக்கர்களுக்கு கேடயம்
மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார் . மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், குந்தா, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய வட்டாட்சியர்களின் பயன்பாட்டிற்கு 3 புதிய வாகனங்களுக்கான சாவிகளை, வாகன
ஓட்டுநர்களிடம் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்கண்ணன்,
மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
(கணக்குகள்) கண்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்,
Leave a Reply