‘சிறுதுளி’ முயற்சியில் மசஒரம்பு நீரோடைக்கு புத்துயிர்! புதர் மண்டியிருந்த ஏழு தடுப்பணைகள் மறுசீரமைப்பு

கோவை; ‘சிறுதுளி’ அமைப்பின் முயற்சியால், சமுதாய பொறுப்பு நிதியில், ரூ.2.5 கோடி செலவழித்து, கோவை மத்வராயபுரத்தில் உள்ள மசஒரம்பு நீரோடை துார்வாரப்பட்டு, ஏழு தடுப்பணைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கன மழை பெய்தபோது, இந்த நீரோடை மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கப்பட்டிருப்பது, விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.நடப்பாண்டு ஒரு வாரம் முன்னதாகவே, தென்மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கியது. கோவையை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து, அனைத்து குளங்களுக்கும், தண்ணீர் பிரித்து அனுப்பப்பட்டது.

நொய்யல் ஆறு என்பது, 34 கிளை நீரோடைகள் இணைந்தது. இவற்றில் பெரும்பாலானவை காலப்போக்கில் அழிந்து விட்டன. சில நீரோடைகள் மட்டும் காணப்படுகின்றன. இருப்பினும், அவற்றில் தண்ணீர் வருவதில்லை.

நீர் மட்டம் உயரும்


ஆலாந்துறை பகுதியில் நீரோடையிலும் கழிவு நீர் கலக்கிறது. தாகம் தீர்க்க வனப்பகுதியை விட்டு வெளியே வரும் விலங்குகள், விளைநிலங்களுக்குள் வருவதால், பயிர்சேதம் ஏற்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரை, நீரோடைகள் வழியாக கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டது. நீரோடைகளை துார்வாரி, தண்ணீரை தேக்கினால், அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

அதில், தொண்டாமுத்துார் மத்வராயபுரத்தில் உள்ள மசஒரம்பு நீரோடை மிக முக்கியமானது. 5.7 கி.மீ., நீளம் கொண்ட இதன் நீர் வழித்தடத்தில், ஏழு தடுப்பணைகள் உள்ளன. இவை நீண்ட காலமாக துார்வாரப்படாமல் இருந்ததால், வண்டல் மண் படிந்து, கொள்ளளவு கணிசமாக குறைந்திருந்தது.பலம் பெற்ற தடுப்பணைகள்


‘சிறுதுளி’ அமைப்பு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற்று, சமுதாய பொறுப்பு நிதியில், ‘டைட்டன் கம்பெனி’யுடன் கைகோர்த்து, ‘மசஒரம்பு நீரோடை புனரமைப்பு’ திட்டத்தை, ஜன., மாதம் துவக்கியது; மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நீரோடையில் வளர்ந்திருந்த புதர்கள் முழுமையாக அகற்றப்பட்டு, துார்வாரப்பட்டது. கரைகள் பலப்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தி, அகலப்படுத்தப்பட்டது. ஏழு தடுப்பணைகள் சீரமைத்து, வலுவாக கட்டமைக்கப்பட்டது.

இதன் வாயிலாக, 10 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பு திறன் உருவாக்கப்பட்டிருக்கிறது. வன விலங்குகளுக்கு நீராதாரமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெய்த மழைக்கு மசஒரம்பு நீரோடையில் தண்ணீர் வந்தது; மறுசீரமைக்கப்பட்ட தடுப்பணைகள் மற்றும் வழித்தடங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு இருப்பதால், விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

‘நீரோடைகளை மீட்டெடுக்கணும்’

‘சிறுதுளி’ நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் தெற்கும், வடக்குமாக மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்திருக்கிறது. மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் பள்ளத்துக்கு வந்தடையும். அதுவே நொய்யல் ஆறாக பயணிக்கிறது; வற்றாத ஜீவ நதி. அதன் நீரோடைகள் புதர்மண்டிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுத்து வருகிறோம். நண்டங்கரை, முண்டந்துறை போன்ற நீரோடைகள் ஏற்கனவே துார்வாரப்பட்டன.மசஒரம்பு நீரோடை வண்டல் மண் படிந்து, புதர் மண்டி இருந்தது. 7 தடுப்பணைகள் சிதிலம் அடைந்திருந்தன; அவற்றை மறுசீரமைப்பு செய்திருக்கிறோம். ஒவ்வொரு தடுப்பணை அருகிலும் சிறிய அளவில் குட்டை உருவாக்கியுள்ளோம்.நீரோடையில் வரும் மழை நீர் ஆங்காங்கே தேக்கப்படும். அதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மசஒரம்பு நீரோடையை மீட்டெடுத்ததன் மூலம், 20 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். நொய்யல் ஆறு வழித்தடத்தில் உள்ள மீதமுள்ள நீரோடைகளை மீட்டெடுக்க வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் புதிதாக தடுப்பணைகள் உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.