கோவை : ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் சாணக்யா சார்பில், ‘ஆப்பரேஷன் சிந்துார் பெருமையை பறைசாற்றும் உரை வீச்சு நிகழ்ச்சி இன்று நடக்கிறது.பஹல்காமில் நடந்த தாக்குதலில், 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கணவனை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்து, அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். இந்த பதிலடி வாயிலாக, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பாடம் புகட்டியது.
ஆப்பரேஷன் சிந்துார், இந்தியாவின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது. இந்தியாவின் ராணுவ பலத்தை உலக அளவில் தெரியப்படுத்திய நிகழ்வாகவும் இருந்தது.ஆப்பரேஷன் சிந்துாரின் பெருமையை, கோவை மக்களுக்கு பறைசாற்ற, ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் ‘சாணக்யா’ சார்பில், உரை வீச்சு எனும் நிகழ்ச்சியை நடத்துகின்றன. இன்று மாலை 6:00 மணிக்கு, கோவை ஆர்.எஸ்.புரம், கிக்கானி பள்ளி கலையரங்கில், நிகழ்ச்சி நடக்கிறது.
ஆப்பரேஷன் சிந்துார் குறித்து, ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தியாகராஜன், பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் ஆகியோர் பேசுகின்றனர்.
சாணக்யாவின் முதன்மை செயல் அலுவலர் ஆர்.ரங்கராஜ் பாண்டே வரவேற்கிறார். சிறப்பு விருந்தினர்களின் உரைக்கு பின், கேள்வி, பதில் நிகழ்ச்சியும் நடக்கிறது.
நம் தலைமுறையும், இனி வரும் தலைமுறையும் பெருமை பட வேண்டிய சரித்திர நிகழ்வு குறித்து துல்லியமாக தெரிந்துகொள்ள, அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.
Leave a Reply