சோமனூர்: நீண்ட காலதாமத்துக்கு பின், கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால், வேலை நிறுத்தம், உண்ணாவிரத போராட்டத்தை விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது. இதையடுத்து விசைத்தறிகளை இயக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. 1.50 லட்சம் விசைத்தறிகளை நம்பி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஜவுளி உற்பத்தியாளர்களுடன், விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தொழிலை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக கூலி குறைப்பு, மின் கட்டண உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜன., முதல் கூட்டமைப்பினர் கூலி உயர்வு கேட்டு மனுக்களை கொடுத்து வந்தனர்.
நீண்ட காலதாமதம்
50 க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் கொடுத்தும், பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலன் இல்லாததால், கடந்த, மார்ச், 19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர். ஏப்., 11 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்தும் தீர்வு கிடைக்காததால், 12 விசைத்தறியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத்தை துவக்கினர்.
பொதுக்குழு கூட்டம்
இதையடுத்து சோமனூர் உண்ணாவிரத பந்தலில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
நிர்வாகிகள் பேசுகையில்,’ பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, 463 நாட்கள் கழித்து கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதற்காக பாடுபட்டவர்களுக்கும், தீர்வு ஏற்படுத்தி கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்,’ என்றனர். தொடர்ந்து, கூட்டமைப்பு நிர்வாகிகள், உண்ணாவிரதம் இருந்த விசைத்தறியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். தெக்கலூர், அவிநாசி, புதுப்பாளையம், கண்ணம்பாளையம், காரணம் பேட்டை, பல்லடம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.
Leave a Reply