விழிக்கும் விமான நிலைய ஆணையம்: அளவீடு செய்து தராமல் தாமதம்

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு, கையகப்படுத்திய நிலங்களின் எல்லையில் கற்கள் நடுவதற்கு, மூன்று இடங்களில் வருவாய்த்துறையினர் இன்னும் அளவீடு செய்து கொடுக்காமல் இருப்பதால், எல்லை தெரியாமல் இந்திய விமான நிலைய ஆணையம் விழித்துக் கொண்டிருக்கிறது.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, 634.82 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தர, தமிழக அரசிடம் விமான நிலைய ஆணையம் கோரியது. அதையேற்று, பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்கி, கையகப்படுத்திய, 451.74 ஏக்கர் நிலம், 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலம் சேர்த்து, 472.32 ஏக்கர் நிலத்தை, எவ்வித நிபந்தனையின்றி, இலவசமாக, 99 ஆண்டு குத்தகைக்கு, கடந்தாண்டு ஆக., மாதம் ஒப்படைக்கப்பட்டது.

ராணுவத்துக்கு சொந்தமான, 134.32 ஏக்கர் நிலத்தில் பணிகள் செய்து கொள்ள முன்அனுமதி வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதி, தற்போது ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்திக் கொடுத்த நிலங்களில், மூன்று இடங்களில் வருவாய்த்துறையினர் அளவீடு செய்து எல்லையை இறுதி கொடுக்காமல் இருப்பதால், அப்பணி நிலுவையில் உள்ளது.

இச்சூழலில், அருகாமையில் உள்ள, 12ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தருமாறு, ஆணையம் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு இன்னும் ஏற்காமல் இருக்கிறது.

இதுதொடர்பாக, வருவாய்த்துறை நிலம் கையகப்படுத்தும் பிரிவினரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

கூடுதலாக, 12 ஏக்கர் கொடுப்பது தொடர்பாக இன்னும் முடிவாகவில்லை. ராணுவத்துக்குச் சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி, ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியையும் ஒப்படைக்க வேண்டும்.

எல்லைக்கற்கள் இல்லாத இடங்களில் அளவீடு செய்து தர கோரியுள்ளனர். இனிமேல், அளவீடு செய்து கொடுப்போம். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், 8 ஏக்கர் இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது; ஒரு நிலம் தொடர்பாக இடைக்கால தடை இருக்கிறது; மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரு வாரத்துக்குள், 15 ஏக்கர் நிலம் ஒப்படைக்க உள்ளோம். மீதமுள்ள நிலங்கள் வழக்கு முடிந்த பிறகே, ஒப்படைக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.