கோவை: கோவையில் இன்று நடந்த கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் இலவசமாக தண்ணீர் பாட்டில் வழங்கி நெகிழ வைத்தனர்.கோவையில் பிரபலமான கோவில்களில் ஒன்று கோனியம்மன் கோவில். இந்த கோவில் கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடக்கும்.
கோவையின் காவல் தெய்வம் என்று கோனியம்மனை மக்கள் அழைத்து வருகின்றனர். இதனால் திருவிழாவில் கோவை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி மக்களும் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம்.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கோவிலில் பல்வேறு வாகனங்களில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக தேர் வலம் வந்தது.
Leave a Reply