வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில், வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால், வால்பாறையில் மனித – வனவிலங்கு மோதலும் அதிகரித்து வருகிறது. எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

சமீபமாக எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த 100க்கும் மேற்பட்ட தெருநாய்களை சிறுத்தைகள் வேட்டையாடியதால், தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எஸ்டேட் பகுதியில் தற்போது தெருநாய்கள், கோழி போன்றவை கிடைக்காத நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகள் நுழைந்து, வேட்டையாட துவங்கியுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில், ஒன்பது குழந்தைகள் உட்பட 11 பேர் சிறுத்தையின் பசிக்கு இரையாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இரு ஆண்டுகளில், மூன்று குழந்தைகளை சிறுத்தை கல்வி சென்று கொன்றது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொழிலாளர் குடியிருப்பில், சிறுத்தைக்கு பிடித்தமான நாய், கோழி போன்றவை வளர்ப்பதால், அவை குடியிருப்பு பகுதிக்கு அடிக்கடி வருகின்றன. உணவுக்காக வெளியே வரும் சிறுத்தைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பதுங்கி, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை, அதன் இரை என நினைத்து, குறிவைத்து கவ்வி செல்கின்றன.
வால்பாறை மலைப்பகுதியை பொறுத்தவரை சிறுத்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Leave a Reply