கோவில்பாளையம்; ‘எதிர் எதிரில் பஸ் ஸ்டாப்புகள் உள்ளதால், கோவை-சக்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் அதிகரித்துள்ளன. மாற்றி அமைத்தால் விபத்து குறையும்.கோவையில் இருந்து, கோவில்பாளையம், கணேசபுரம், அன்னுார், புளியம்பட்டி வழியாக சத்தி மற்றும் கர்நாடகாவுக்கு தினமும் 25,000க்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.

குறிப்பாக, புளியம்பட்டி, அன்னுார் பகுதியில் இருந்து பல ஆயிரம் பேர் தினமும் கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், அலுவலகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் செல்கின்றனர்.
நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அன்னுார், கோவில்பாளையம், குரும்பபாளையம், கணேசபுரம், பசூர் ஆகிய ஊர்களில் பஸ் ஸ்டாப்புகள் எதிரெதிரில் இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் விபத்தும் அதிகரித்துள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவில் பாளையம் மக்கள் கூறியதாவது:
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குரும்பபாளையம் பஸ் ஸ்டாப்பில் அதிகளவில் போக்குவரத்து உள்ளது மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் மற்றும் அன்னுாரிலிருந்து ஏர்போர்ட் மற்றும் பீளமேடு செல்ல குரும்பபாளையத்திலிருந்து கிழக்கே காளப்பட்டி வழியாக அதிக வாகனங்கள் செல்கின்றன.
அதேபோல் காளப்பட்டியில் இருந்தும் குரும்பபாளையம் மற்றும் சரவணம்பட்டிக்கு அதிக வாகனங்கள் செல்கின்றன.
இங்கு மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் சாலையின் தெற்கு பகுதி மற்றும் கிழக்குப் பகுதியில் பஸ் ஸ்டாப்புகள் உள்ளன.
ஏற்கனவே இந்த பகுதி குறுகியதாக உள்ளது. இங்கு சாலையின் இருபுறமும் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, குரும்பபாளையம் பஸ் ஸ்டாப்பை, கோவை செல்லும் சாலையில் மேலும் 100 மீ., தள்ளி அமைக்க வேண்டும்.
குரும்பபாளையத்தில் இருந்து காளப்பட்டி செல்லும் பஸ்களுக்கான ஸ்டாப்பையும் கிழக்கில் 100 மீ., தள்ளி அமைக்க வேண்டும். இதனால் இந்த மூன்று சாலைகள் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் தீரும். விபத்து குறையும்.
இதே போல் கணேசபுரத்தில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் எதிரெதிரே பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. கோவை செல்லும் பஸ்களும், சத்தி செல்லும் பஸ்களும் எதிர் எதிரே இருக்கின்றன.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே பஸ் ஸ்டாப்பை மூன்று சாலை சந்திப்பிலிருந்து 100 மீ., கோவை சாலையில் தள்ளி அமைக்க வேண்டும்.
பசூரில் மூன்று சாலை சந்திப்பில், மூன்று பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. கோவை செல்பவை, சக்தி செல்பவை, மொண்டி பாளையம் செல்பவை என மூன்று ஸ்டாப்புகள் உள்ளன. இங்கு பஸ் ஸ்டாப்புகளை மாற்றி அமைக்க வேண்டும்.
Leave a Reply