கோவை; கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை, மாநகராட்சி நிர்வாகம் ஏற்க மறுத்ததால், அவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று இரண்டாம் நாளாக தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்கோவை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, சம்பள பட்டியலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள முழு சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கடந்த ஏழாண்டுகளாக போராடி வருகின்றனர்.

இப்போராட்டத்தின் வாயிலாக, நேற்று முன் தினம் மாலை, துாய்மை பணியாளர்களை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அழைத்து பேசினார். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து, நேற்று காலை கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், இரண்டாம் நாளாக தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கினர். இப்போராட்டம் காலவரை நிர்ணயிக்கப்படாமல் தொடரும் என்று, ஒப்பந்த துாய்மைப்பணியாளர்கள் கூறினர்.
இது குறித்து, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் துப்புரவு தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியதாவது:
தமிழக அரசாணை எண். 62ன் படி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், துாய்மை பணியாளர்களிடம் மாதா மாதம் பிடித்தம் செய்யப்படும் சம்பள ரசீதை வழங்க வேண்டும்.
எங்களுக்கான சம்பள பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, நாளொன்றுக்கு, 770 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். அதோடு, இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீட்டுக்கு பிடித்தம் செய்யப்படும் தொகை முறையாக செலுத்தப்பட வேண்டும்.
ஆனால் இதை தவிர்த்து, எங்களுக்கு பணி வழங்கும் ஒப்பந்த நிறுவனம், நாளொன்றுக்கு 540 ரூபாய் மட்டுமே வழங்குகிறது.
கோர்ட்டின் வழிகாட்டு நெறிமுறை, தொழிலாளர் நலசட்டம் ஆகியவற்றின்படி, ஒப்பந்த துாய்மைப்பணியாளர்களுக்கு அரசால் பரிந்துரைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும்.
மாநகராட்சி உயர் அதிகாரிகள், அரசின் மீதும், அரசுத்துறை மீதும், சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க பார்க்கின்றனர். தொழிலாளர் நலச்சட்டங்களும், ஒப்பந்தப்பணியாளர்களுக்கான சட்டமும், கோர்ட்டின் வழிகாட்டு நெறிமுறைகளும், அனைவருக்கும் ஒன்று தான்.
அதை அதிகாரிகள் புரிந்து கொண்டு, துாய்மைப்பணியாளர்களுக்கான நியாயமான, முழுமையான சம்பளத்தை வழங்க வேண்டும்.
போராட்டம் தொடரும் பட்சத்தில், நிரந்தர துாய்மைப்பணியாளர்களால் மட்டும் துாய்மை பணியை செய்ய முடியாது. அவர்களும் போராட்டத்தில் இணைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிலையில், போராட்டம் காரணமாக நகரின் பல பகுதிகளில் அள்ளப்படாத குப்பையால், நாற்றம் எடுக்கிறது. சுகாதார பிரச்னைகள் தலைதுாக்கும் முன், துாய்மை பணியாளர்களின் நீண்டநாளைய கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே, பொதுமக்களின் கருத்து.
Leave a Reply