கோவை; கோவையில் என்னென்ன திட்டச்சாலைகளை கைவிடலாம் என்கிற பட்டியல் மாநகராட்சியில் இருந்து தயாரிக்கப்பட்டு, நகர ஊரமைப்பு துறைக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்துக்கான ‘மாஸ்டர் பிளான்’ தயாரிக்கும் பணியில், நகர ஊரமைப்பு துறை ஈடுபட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.

மாநகராட்சி பகுதியில் உள்ள உத்தேச திட்ட சாலைகளை கைவிடுவதற்கு முடிவு செய்திருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் காலங்களில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல திட்டச்சாலைகள் அவசியம் என, வடக்கு மண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அனைத்து மண்டல கவுன்சிலர்களிடமும் திட்டச்சாலைகளின் அவசியம் குறித்து நகரமைப்பு பிரிவினர் கேட்டறிந்து, நகர ஊரமைப்பு துறைக்கு அறிக்கை அனுப்பினர்.
நகரமைப்பு அலுவலர் குமார் கூறுகையில், ”மாநகராட்சி பகுதியில் எந்தெந்த திட்டச்சாலைகள் தேவை என்பதை உள்ளூர் திட்ட குழுமம், நகர ஊரமைப்பு துறை மற்றும் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
அக்கடிதம் இம்மாதம் நடைபெற உள்ள, மன்ற கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்படும். கட்டடங்கள் உள்ள திட்டச்சாலைகள் மற்றும் மனைப்பிரிவு அனுமதி பெற்றது; அளவீடு மாற்றப்பட்டு அனுமதி பெற்ற லே-அவுட்டுகளாக மாற்றப்பட்டுள்ள பகுதியில் உள்ள, திட்டச்சாலைகளை தவிர்த்து மற்றவை மாநகராட்சிக்கு தேவை என்பதை சுட்டிக் காட்டியுள்ளோம்,” என்றார்.‘வீடுகளாக மாறிய ரோடுகள்’
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ”மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பழைய ரோடுகளை சேர்க்காமல் விட்டு விட்டால், திரும்ப வராமல் போய் விடும். சில இடங்களில் ரோடு என ஒதுக்கப்பட்டு, வீடுகளாக மாறி இருக்கிறது. கைவிடலாம் என திட்டமிட்டுள்ள ரோடுகளை கவுன்சிலர்களுடன் ஆலோசித்து, மறுஆய்வு செய்து, அறிக்கை அனுப்பியுள்ளோம்,” என்றார்.
Leave a Reply