கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முக்கிய அனுமதியை பெற்ற தமிழக அரசு.. கட்டட பணிகள் எப்போது?

கோவை: கோவையில் கட்டப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான தடையில்லா சான்று இந்திய விமான நிலையம் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்பை இறுதி செய்ய விளையாட்டு துறை முடிவு எடுத்துள்ள நிலையில், கிரிக்கெட் மைதானம் குறித்த பொதுமக்களின் கருத்துகளும் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று திமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் செல்வ கணபதி வெற்றிபெற்ற நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி மேற்கொண்டு வருகிறது.முதற்கட்டமாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. சில இடங்கள் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், இறுதியாக ஒண்டிபுதூரில் திறந்தவெளி சிறைச்சாலை இயங்கி வரும் 20.72 ஏக்கர் இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த இடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் சிறைத்துறைக்கு சொந்தமான இடம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கிரிக்கெட் மைதானத்திற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மைதானத்தின் 3 கட்டிய மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்த வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் சமர்ப்பிக்கப்பட்டு, எந்த மாதிரியான வடிவமைப்பு என்பதை இறுதி செய்ய உள்ளார். இந்த நிலையில் கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் மைதானத்தில் உணவகம், ஸ்போர்ட்ஸ் பார், கிளப் ஹவுஸ், உயர் தர இருக்கை வசதி, உட்புற பயிற்சி வளாகம், வீரர்களுக்கான ஓய்வறை, விரிவுரை அரங்குகள், விஐபி அரங்குகள், ஸ்பாஸ், கார்ப்பரேட் அறைகள், பொழுதுபோல்க்கு வசதிகள், உடற்பயிற்சி கூடம், ரசிகர்களுக்கான பிரத்யேக நுழைவு வாயில் என்று சிறப்பாக உருவாக்கப்படவுள்ளது. இதன்பின் டெண்டர் பணிகள் தொடங்கும்.கோவையில் ஏற்கனவே ரஞ்சி டிராபி மற்றும் டிஎன்பிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த சர்வதேச மைதானம் உருவாக்கப்படும் பட்சத்தில் சென்னைக்கு நிகராக கோவையில் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே டைடல் பார்க், தொழில்கள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விளையாட்டுக்கான கட்டமைப்பும் உருவாக்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.