மூன்று நாட்களுக்கு கோவை ‘ஜில்’லிடும்; வெப்ப நிலை 3 டிகிரி வரை குறையும்

கோவை; இன்று முதல் 3 நாட்களுக்கு கோவையில், வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைவாக பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவையில் வரும் 30ம் தேதி வரை, சமவெளிப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 12 கி.மீ., முதல் 24 கி.மீ., வரை வீசக்கூடும்.மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து காணப்படும். குறிப்பாக, 27, 28, 29ம் தேதிகளில் வெப்பநிலை குறையும்.

சோளம், மக்காச்சோளம், கம்பு பயிர்களுக்கு நைட்ரஜன் உரங்களை இடலாம். மழையைப் பயன்படுத்தி, இறவை சாகுபடியில் மக்காச்சோளத்தை, விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். 5 மாதத்துக்கு மேல் உள்ள வாழைக்கு முட்டுக் கொடுக்கவும். மஞ்சளுக்கு போதிய வடிகால் வசதி செய்யவும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.