தலைக்கு ஹெல்மெட்டும், முகத்துக்கு ‘மாஸ்க்கும்’ மாட்டிக் கொண்டு, நகர்வலம் புறப்பட்டாள் சித்ரா.
பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, ”என்னக்கா, கொரோனா வந்துடும்னு பயம் வந்துருச்சா,” என, கிண்டலடித்தாள்.
”என்னப்பா… அசால்ட்டா கேட்டுட்டே… பொது சுகாதாரத்துறையே ‘வார்னிங்’ கொடுத்துருக்கு. ஜி.ஹெச்.,க்குள்ள யாரு போனாலும், ‘மாஸ்க்’ கட்டாயம்னு ‘மைக்’குல அறிவிப்பு வெளியிட்டாங்க. இதை யாரோ கேட்டு, மேலிடத்துக்கு தகவல் சொல்லிட்டாங்க போலிருக்கு,”
”கொரோனா தொற்று பரவுதுன்னு அதிகாரப்பூர்வமா சொன்னா, ‘பப்ளிக்’ பீதியாகிடுவாங்கன்னு புத்திமதி சொல்லி, இனி ‘மைக்’ குல சொல்லாதீங்க. நேருக்கு நேரா பார்த்து, ‘மாஸ்க்’ போட்டுக்கிட்டா நல்லாயிருக்கும்னு, வாய்மொழியா சொன்னா போதும்னு சொல்லியிருக்காங்க. நாமும் ஏகப்பட்ட இடத்துக்குப் போறோம்; நமக்கு வராதுன்னு என்ன நிச்சயம். உஷாரா இருக்க வேண்டாமா,” என, லெக்சர் எடுத்தாள் சித்ரா.
செங்கல் சூளை ஜோர்
”அதெல்லாம் இருக்கட்டும். ஐகோர்ட் உத்தரவை மீறி, நம்மூர்ல இன்னமும் செங்கல் சூளை செயல்படுதாமே. கனிம வளத்தை சுரண்டி அள்ளிட்டு இருக்காங்களாமே…”
”ஆமாப்பா… நானும் கேள்விப்பட்டேன். செம்மண் கொள்ளையர்கள் ஆட்டத்தை ஒடுக்க முடியாம மாவட்ட நிர்வாகம் தடுமாறுது. ராத்திரி நேரத்துல லோடு லோடா கடத்துறாங்க. தடாகம் ஏரியாவுல செங்கல் சூளையை தடை செஞ்சதும், பேரூர் ஏரியாவுக்கு தாவுனாங்க.
நீதிபதிகள் குழு மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்துல, ஆய்வு செஞ்சு கோர்ட்டுக்கு அறிக்கை கொடுத்ததும், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துச்சு. அதுக்கப்புறம்… மதுக்கரை ஏரியாவுக்கு மணல் மாபியாக்கள் போனாங்க. இப்போ, காரமடை ஏரியாவுக்கு போயிருக்காங்க,”
”ஆளுங்கட்சியை சேர்ந்த ஒன்றிய நிர்வாகி ஒருத்தரு, மிகப்பெரிய அளவுல கண்டியூரில் செங்கல் சூளை நடத்திக்கிட்டு இருக்காரு. ‘கவர்மென்ட் பெர்மிஷன்’ வாங்கி நடத்துறதா வெளியே சொல்லிட்டு இருக்காரு.
காரமடை மேற்கு பகுதியில இருக்கற விவசாய விளைநிலங்கள் இருந்து, சூளைக்கு தேவையான மண்ணை லாரிகள்ல லோடு லோடா எடுத்துட்டு போறாங்க. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்ங்கிறதுனால, வருவாய்த்துறை ஆபீசர்ஸ் கண்டுக்கறதில்லை. மாவட்ட நிர்வாகமும் மவுனமா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு,”
மான் வேட்டை நடக்குது
”நம்மூர் கவர்மென்ட் ஆபீசர்ஸ் பலரும் ‘ரிசார்ட்ஸ்’க்கு போயி, கும்மாளம் போடுறாங்களாமே…”
”அதுவா… 15 மாச கர்ப்பத்துடன் இருந்த பெண் யானை இறந்தது சம்பந்தமா விசாரிச்சப்போ, ஏகப்பட்ட திரைமறைவு விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துச்சுப்பா. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்துல இருக்குற ‘ரிசார்ட்ஸ்’களுக்கு கவர்மென்ட் ஆபீசர்ஸ் பலரும் போயிட்டு வர்றாங்களாம்.
”மான் வேட்டையும் நடந்துக்கிட்டு இருக்குதாம். வேட்டைக்கு போறவங்களோட, வேட்டை தடுப்பு காவலர்கள் சிலரும் கைகோர்த்து செயல்படுறதா தகவல் ‘லீக்’காகியிருக்கு. மான்களை வேட்டையாடி, கறியை கூறு போட்டு, சிட்டிக்குள்ள கொண்டு வந்து, ‘சேல்ஸ்’ பண்றாங்களாம். வனத்துறை ஆபீசர்ஸ் கவனத்துக்கு கொண்டு போயும் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்,”
”ரிசார்ட்ஸ்கள்ல தங்குறவங்களுக்கு, மான் கறி சமைச்சு கொடுக்குறாங்கன்னு வன ஆர்வலர்கள் சொல்றாங்க. ஆபீசர்ஸ் பலரும் பொழுதுபோக்குறதுக்கு, ‘ரிசார்ட்ஸ்’க்கு வர்றதுனால, மேல்நடவடிக்கை எடுக்காம இருக்குதாம்.
இந்த விஷயத்துல, கவர்மென்ட் சைடுல ஆக்சன் இல்லாததுனால, ஐகோர்ட் உதவிய நாடப் போறாங்க. கனிம வள கொள்ளைய விசாரிக்கிற மாதிரி, மான் வேட்டை விஷயத்திலும், கோர்ட் கடுமையான நடவடிக்கை எடுக்கணும்னு விரும்புறாங்க…”
வைட்டமின் ‘ப’
”வைட்டமின் ‘ப’ கொடுக்கலைன்னா, ரெவின்யூ ஆபீஸ்ல பிறப்பு, இறப்பு சர்ட்டிபிகேட் தராம கெடப்புல போடுறாங்களாமே…”
”அதுவா… பிறப்பு, இறப்பை ஒரு வருஷத்துக்குள்ள பதிவு செய்யலைன்னா, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டுல அப்ளை பண்ணனும். அன்னுார் ஏரியாவுல தாலுகா ஆபீஸ் வரைக்கும் ஈஸியா ‘அப்ரூவல்’ கொடுக்குறாங்க. வடக்கு கோட்டாட்சியர் ஆபீசுக்கு பைல் வந்தா முடக்கி வச்சிடுறாங்க. வைட்டமின் ‘ப’ கொடுத்தா மட்டுமே சர்ட்டிபிகேட் தர்றாங்க. வைட்டமின் ‘ப’ கொடுக்க முடியாதவங்க, மாசக்கணக்குல அலையுறாங்க,”
”அப்படியா…” என்ற மித்ரா, ”நார்த் தாலுகா ஆபீசுல நடந்த ஒரு சம்பவம் தெரியும் சொல்லட்டுமா,” என்றவாறு, ”போன வாரம் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்துச்சு. பத்திரிகை போட்டோகிராபர்கள் சிலருக்கு, தலா, 500 ரூபாய் வீதம், தாசில்தாரின் உதவியாளர் ‘கவனிச்சிருக்காரு’. அதை கேள்விபட்டதும், பத்திரிகையாளர்கள் பெயரில் நம்மூரில் உலா வரும் பலரும் தாலுகா ஆபீசுக்கு போயிருக்காங்க,”
”மொத்தம், 20 பேர் இருந்திருக்காங்க. எண்ணிக்கையை பார்த்து மிரண்ட தாசில்தார், தலைமையிட துணை தாசில்தாரை பாருங்கன்னு, கை காட்டிட்டுட்டு நழுவிட்டாரு. அவரோ, ஒருத்தருக்கு, 500 ரூபாய்ன்னா, 20 பேருக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு எங்கே போவேன்னு புலம்பி இருக்காரு. பத்திரிகையாளர்கள் போர்வையில் வந்தவங்க, அங்கேயே சுத்தி சுத்தி வந்திருக்காங்க. நில அளவையர்கள் உள்ளிட்ட சிலரிடம் இருந்த பணத்தை திரட்டி, கொடுத்து அனுப்பியிருக்காங்க… ” என்றாள்.
”விளங்கினாப்லதான்… கார்ப்பரேஷன்ல லேட்டஸ்டா ஒரு பிரச்னை ஓடுது. லோக்சபா எலக்சன் சமயத்துல வேலை பார்த்த, தேர்தல் பார்வையாளருக்கு உணவு செலவா, 12 லட்சம் ரூபாய் செலவு செஞ்சிருக்காங்க. கார்ப்பரேஷன் சென்ட்ரல் ஜோன்ல இருந்து கோப்பு போயிருக்கு; கார்ப்பரேஷன் நிதியில இருந்து அவ்ளோ தொகையை செலவிட்டிருக்காங்க.
கலெக்டர் ஆபீசுக்கு கடிதம் எழுதி, தேர்தல் ஆணையத்துல இருந்து தொகையை திரும்ப வாங்கணும். இவ்ளோ தொகையை செலவழிச்சதுக்கு, மாமன்ற கவுன்சில் கூட்டத்துக்கு தீர்மானம் கொண்டு வரணும். பொதுவெளியில் விமர்சனம் வரும்னு பயந்துக்கிட்டு, இதுவரைக்கும் அப்படி செய்யாம, மூடி மறைச்சிட்டு இருக்காங்களாம்…”
”குப்பை கிடங்கு பிரச்னையில, அந்த ஏரியா ‘பப்ளிக்’ கார்ப்பரேஷன் மேல, கடுங்கோபத்துல இருக்காங்களாமே…”
”அதுவா… இவ்ளோ நாளா… குப்பைய மட்டும் கொட்டிட்டு இருந்தாங்க. இப்போ, கோழிக்கழிவுகளையும் கொண்டு வந்து, குழி தோண்டி புதைக்கிறாங்க. நாத்தம் தாங்க முடியாம அவதிப்படுறாங்க. கார்ப்பரேஷன் குப்பை போதாதுன்னு, சோமையம்பாளையம் ஊராட்சியில இருந்தும் கொண்டு வர்றதுக்கு, ‘பிளான்’ போடுறாங்க.
அப்புறம்… குப்பையில மின்சாரம் தயாரிக்கிறதா சொல்லி, திருப்பூர் குப்பையையும் நம்மூருக்கு எடுத்துட்டு வரப் போறாங்களாம். அதனால, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் மேல கடுங்கோபத்துல ‘பப்ளிக்’ இருக்காங்க…” என்றபடி, போலீஸ் கமிஷனர் ஆபீஸ் அருகில், வண்டியை நிறுத்தினாள்.
கரன்சி பறிப்பு
”போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு பக்கத்துல இருக்கற, ரெண்டு கடைகள்ல மட்டுமே புகார்களை ‘டைப்’ செஞ்சுட்டு வரணும்னு கட்டாயப்படுத்துறாங்களாமே… இதெல்லாம்… மேலதிகாரிகளுக்கு தெரியுமா…”
”அதுவா… ‘மை வி 3’ நிறுவன மோசடி, யு.டி.எஸ்., மோசடி சம்பந்தமா பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்காரங்க விசாரிக்கிறாங்க. பணத்தை இழந்தவங்க லிஸ்ட்டுல, மதுரை, திருப்பூருன்னு வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்தவங்களும் இருக்காங்க.
கேரளாவுல இருந்தும் கூட வர்றாங்க. கம்ப்ளைன்ட் ஒரே மாதிரி இருக்கணும்னு, போலீஸ் தரப்புல, ஒரு ‘பார்மட்’ ரெடி பண்ணியிருக்காங்க,”
”கம்ப்ளைன்ட் கொடுக்க வர்றவங்கள்ட்ட, கோபாலபுரத்துல இருக்கற ரெண்டு கடைகள்ல, ‘டைப்’ செஞ்சு, பிரிண்ட் எடுத்துட்டு வரச் சொல்றாங்க. அந்த கடைகள்ல ஒரு நாளைக்கு, 15 பேருக்கு தான் ‘டைப்’ பண்ணி, பிரிண்ட் தருவோம்னு கட்டுப்பாடு வச்சிருக்காங்க. வெளியூர்ல இருந்து வர்றவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. வெளிமாவட்டங்கள்ல இருந்து வர்றவங்க, ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கி, மறுநாள் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியிருக்கு,”
”இதுல, இன்னொரு பிரச்னை என்னான்னா… எவ்ளோ தொகை இழந்திருக்கோம்னு குறிப்பிடுறாங்களோ… அதுக்கேத்த மாதிரி, அந்த ரெண்டு கடையிலும் பணம் பறிக்கிறாங்க. கொஞ்ச தொகைன்னா… பிரிண்ட் எடுக்க, 800 ரூபாய் செலுத்தணும்; அதிக தொகைன்னா… பல ஆயிரத்தை தாண்டுது. கம்ப்ளைன்ட் கொடுக்கறதுக்கே பல ஆயிரத்தை செலவழிக்க வேண்டியிருக்குதாம்,”
”போலீஸ்காரங்க தயாரிச்ச ‘பார்மட்’ டை, கம்ப்ளைன்ட் பார்ட்டியிடம் கொடுத்தா, ஏதாச்சும் ஒரு கடையில ‘டைப்’ பண்ணி, ‘பிரிண்ட்’ எடுத்துட்டு வந்துருவாங்க; ஒரே நாள்ல அவுங்களுக்கும் வேலை முடிஞ்சிடும்னு சொன்னா, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்காரங்க கேட்கறதில்லையாம். அவுங்களுக்கும், கடைக்காரங்களுக்கும் ‘லிங்க்’ இருக்குமோன்னு சந்தேகப்படுறாங்க.
இதெல்லாம், போலீஸ் கமிஷனர் காதுக்கு இன்னும் போய் சேரலை போலிருக்கு. அவரோட ஆபீஸ் வளாகத்துக்குள்ள இருந்துக்கிட்டு, போலீஸ்காரங்க வேலைய காட்டிட்டு இருக்காங்கன்னு, கம்ப்ளைன்ட் பார்ட்டிகள் புலம்புறாங்க…” என்றபடி, கேன்டீனுக்குள் நுழைந்தாள் மித்ரா.
அவளை பின்தொடர்ந்து சென்றாள் சித்ரா.
Leave a Reply