மருத்துவ கழிவு கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை; ‘வீடியோ’ பதிவில் காங்., கவுன்சிலர் கோரிக்கை

கோவை; மாநகராட்சி பகுதிகளில் காலாவதியான மருத்துவ கழிவுகள் விதிமீறி கொட்டப்படுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்குமாறு காங்., கவுன்சிலர் வலியுறுத்தியுள்ளார்.மாநகராட்சி, 15வது வார்டு கவுன்சிலர்(காங்.,) சாந்தாமணி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளதாவது:

எங்கள் வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் பகுதியில், கடந்த வாரம் காலாவதியான மருத்துவ கழிவு மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. பொது மக்கள் உதவியுடன் அடையாளம் கண்டபோது, தனி நபர் ஒருவர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இப்படி வைத்தது தெரியவந்தது.
மாநகராட்சி முறையான வழிகாட்டுதல் வழங்கியிருந்தும், இவை எங்கிருந்து வருகின்றன, எங்கிருந்து உருவாகின்றன என்பதை கண்டறிந்து தடுத்து நிறுத்த, மாநகராட்சி கமிஷனர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட எங்களை போன்ற பகுதிகளுக்கு, பில்லுார்-3 திட்டத்தில் வழங்கப்படும் தண்ணீர், மழைக்காலத்திலும் ஐந்து, ஆறு நாட்களுக்கு முற்றிலும் நிறுத்தப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.