பொள்ளாச்சி; காய்ச்சல், சளி மற்றும் இருமல் பாதிப்பு உள்ள வர்கள், ‘டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லவும்’ என, மருந்து கடைகளில் அறிவிப்பாக வைக்க வேண்டுமென, மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில், ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா பாதிப்பு தான் உள்ளது என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது வீரியமற்றது; உயிர் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது இல்லை.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு, மூன்று நாட்களில் குணமடைவர்.
இந்தாண்டு கொரோனா நோய் பாதிப்புகளுக்கான தீவிர தன்மை குறித்து கண்டறிய, பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காய்ச்சல், சளி மற்றும் இருமல் பாதிப்பு உள்ளவர்கள், மருந்து கடைகளுக்கு நேரடியாகச் சென்று, தாமாக மருந்து வாங்கி உட்கொள்வதை தடுக்க, மருந்து கட்டுப்பாட்டு துறையால் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இத்தகைய நோய் பாதிப்பு உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து வாங்க முற்பட்டால், அவர்களிடம், ‘அருகில் உள்ள டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லுங்கள்,’ என அறிவுறுத்துமாறு, மருந்தக உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்த தகவலை, மருந்துக் கடைகளில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி அறிவிப்பாக காட்சிப்படுத்த வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் குருபாரதி கூறியதாவது:
மாவட்டம் முழுவதும் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது, கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் பலருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் காணப்படுகின்றன. அவர்களில், சிலர், மருந்துக் கடைகளில் இருந்து, தாமாகவே மருந்து வாங்கி, உட்கொள்ள முற்படுகின்றனர். இதனால், கொரோனா, டெங்கு, புளூ என, காய்ச்சலின் தன்மை குறித்து முழுமையாக அறிய முடிவதில்லை.
எனவே, இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரை சீட்டின்றி மருந்து வாங்க வந்தால், அவர்களை டாக்டரிடம் செல்ல அறிவுறுத்த வேண்டும் என, மருந்தக உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.மருத்துவ முகாம் நடத்தப்படும்!
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:தென்மேற்கு பருவமழை பெய்யும் நிலையில், பருவநிலை பாதிப்பால், காய்ச்சல், சளி, மூக்கில் ஒழுகுதல், வறட்டு இருமல், உடல் சோர்வு, வலி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.பருவ கால பாதிப்புகள் என்பதால், மக்கள் பயப்பட வேண்டாம்; அதேநேரம், அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். பாதிப்புக்கு ஏற்றவாறு சிகிச்சை பெறுவது அவசியம்.ஒரே பகுதியில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாலோ, ஒரே குடும்பத்தில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாலோ, அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைந்து இருப்பதை உணர்ந்து, உடனடியாக அங்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், காய்ச்சல் பாதிப்பு பெரிதாக இல்லை.இவ்வாறு, கூறினர்.
Leave a Reply