பிரதான குழாயில் ஏற்படும் உடைப்பால் வீணாகும் குடிநீர்! சீரமைப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம்

பொள்ளாச்சி; கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. உரிய திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டு குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் குடிநீர் தேவை, ஆழியாறு அணையை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்கள் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக, ஆழியாறு ஆற்றுப்படுகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Latest Tamil News

பிரதான குழாய்கள் வாயிலாக, நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு சென்று, வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த திட்டங்கள் வாயிலாக, பொள்ளாச்சி, வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதியில், பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால், பிரதான குழாய் உடையும் போது, குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக அதனை சீரமைக்க முற்படுவதில்லை.

இதனால், நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் வினியோகத்தில் கவனம் செலுத்த வேண்டிய அதிகாரிகள், அலட்சியம் காட்டி வருகின்றனர் என, புகார் கிளம்பியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, கூட்டுக்குடிநீர் திட்டங்களின் பிரதான குழாய்களில், சில இடங்களில் தண்ணீர் திருட்டுக்காக உடைக்கப்படுவதாகவும், நீண்ட காலமாக புகார் உள்ளது. உடைப்பிலிருந்து வெளியேறி தடுப்பணை போல தண்ணீர் தேங்கும்போது, இரவு நேரங்களில் குழாய் வாயிலாகவும் தண்ணீர் திருடப்படுவதாக புகார் எழுகிறது.

அவ்வகையில், ஆனைமலை அடுத்த ஆழியாறு – கோட்டூர் பிரிவு அருகே கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டும், 15 நாட்களாக சீரமைக்கப்படவில்லை.

குடிநீர் வினியோகம் அதிகமுள்ள கிராமங்களில், குடியிருப்புகளுக்கு வழங்குவதை முறைப்படுத்தவில்லை. தாழ்வான பகுதியில் அதிகளவும், மேடான பகுதிக்கு குறைந்தளவும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் அதிகளவில் பெறுவோர், முக்கியத்துவம் கருதாமல், தோட்டச்செடிகளுக்கு பாய்த்து வீணடிக்கின்றனர்.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

ஆழியாறு ஆற்றில் இருந்து, கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக தென்சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார், சோமந்துறைசித்துார், கரியாஞ்செட்டிபாளையம், பில்சின்னம்பாளையம், பெத்தநாயக்கனுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு பிரதான குழாய் வாயிலாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

இதற்கான பிரதான குழாயில், ஆழியார் கோட்டூர் பிரிவு வழியே கடந்து செல்கிறது. அங்கு, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, நீரூற்று போல வெளியேறி வருகிறது. அதிலும், 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வெளியேறி, சாலையோரத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதேபோன்று, பொள்ளாச்சியில் பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிச்சி – குனியமுத்துார் திட்டத்தில் பல இடங்களில் குழாய் உடைந்து, குடிநீர் வீணாகிறது.

பல உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீர் வினியோக நாட்களுக்கான இடைவெளி அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் விரயமாவதை தடுக்க வேண்டும். இதற்கு, முறையான கண்காணிப்பு இல்லாததே காரணமாகும்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க சிறப்பு பணியாளர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, குழாய் உடைப்பு, நீர்க்கசிவு ஏற்படுவதை கண்டறிந்து, விரைந்து சீரமைக்க முடியும். கோடையிலும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க முடியும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.