சின்னவேடம்பட்டி ஏரிக்கு பவானி ஆற்று நீர் தேவை பதிவுத் தபாலில் பறந்தது விவசாயிகளின் கோரிக்கை

கோவை : கோவையின் வடக்கு பகுதியில் உள்ள சின்னவேடம்பட்டி ஏரி, 235 ஏக்கர் பரப்பு கொண்டது. கணுவாய் முதல் ஏரி வரை எட்டு கி.மீ., துாரத்துக்கு ராஜவாய்க்கால் இருக்கிறது.ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்; வேளாண்மை சிறக்கும். அதனால், மழைக்காலங்களில் தண்ணீரை தேக்க, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2021ல் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு வந்த, தமிழக முதல்வர் ஸ்டாலின், துடியலுாரில் பேசியபோது, ‘பவானி ஆற்றின் உபரி நீர் சின்னவேடம்பட்டி ஏரிக்கு கொண்டு வரப்படும்’ என, வாக்குறுதி கொடுத்தார்.

அதை நம்பி, அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், விவசாயிகள் இணைந்து ‘நமக்கு நாமே’ திட்டத்தில் பங்கேற்று, ஏரியை சீரமைத்திருக்கின்றனர்.

தற்போது, அதற்கு நேரெதிராக, மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீரை, மூன்றாம் நிலை சுத்திகரிப்பு செய்து, ஏரியில் தேக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.நாளொன்றுக்கு, 9.9 மில்லியன் லிட்டர் கொள்ளளவுக்கு, சுத்திகரிக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு, ரூ.318.90 கோடிக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியிருப்பது, விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

வணிக நோக்கத்தோடு ஏரியை பயன்படுத்தும் வகையில், சுத்திகரிக்கும் கழிவு நீரின் ஒரு பகுதியை ஏரியிலும், மீதமுள்ள கழிவு நீரை தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யவும், மாநகராட்சி முடிவெடுத்திருக்கிறது.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் விவசாயிகள் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு செல்லும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தி, பதிவு தபாலில் கோரிக்கை மனுக்களை, சின்னவேடம்பட்டி சுற்றுப்பகுதி விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

‘திட்டத்தை கைவிட வேண்டும்’

விவசாயி காளிச்சாமி அனுப்பியுள்ள மனு விபரம்:தமிழக நீர்வளத்துறையால் குத்தகைக்கு வழங்கப்பட்ட நீர் நிலைகளில், கோவை மாநகராட்சி நிர்வாகம் கழிவு நீரை தேக்கி வருகிறது; நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கின்றன. குளங்களில் கழிவு நீர் மட்டுமே தேங்கியுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்களை மீட்டுருவாக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது.கோவையின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு முக்கிய நீராதாரமாக, 1987 முதல் பயன்பாட்டில் இருந்து வரும் சின்னவேடம்பட்டி ஏரி, நமக்கு நாமே திட்டத்தில் சீரமைக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பின், 2023ல் இந்த ஏரிக்கு மழை நீர் வந்தது.அந்த ஏரியில், சுத்திகரித்த கழிவு நீரை தேக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்தால் மண் வளம் பாதிக்கும்; 25 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மாசுபடும். கழிவு நீரை தேக்குவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை. இந்த ஏரியை சரியாக பயன்படுத்தினால், சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, வெள்ளானைப்பட்டி முதல் அரசூர் வரை நிலத்தடி நீர் உயரும். விவசாய நிலங்கள், கால்நடைகள் பயனடையும். எனவே, சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரித்த கழிவு நீரை ஏரியில் தேக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.