கோவை; பொது இடங்களுக்கு செல்லும் போது, முகக்கவசம் அணிய சுகாதார துறை அறிவுறுத்தியதை தொடர்ந்து, உஷாராகியுள்ள பொதுமக்கள் பலர், ‘மாஸ்க்’ அணிய துவங்கியுள்ளனர். இதனால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இது, பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கொரோனா பரவல் இல்லை என, சுகாதார துறை தைரியம் சொல்கிறது. ஆனாலும் சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், தும்மல், இருமலின் போது கைக்குட்டையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, சுவாச பிரச்னைகள், இணை நோய் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயம் மற்றும் விழிப்புணர்வு காரணமாக, மீண்டும் மாஸ்க் விற்பனை அதிகரித்துள்ளதாக, மருந்து விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்க தலைவர் செல்வன் கூறுகையில்,”கொரோனாவுக்குப் பின், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சளி பிடித்தாலும், தாங்களாகவே முகக்கவசம் அணிய பழகிவிட்டனர். தற்போது பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிய, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதால், விற்பனை அதிகரித்துள்ளது,” என்றார்.
தரம் குறைந்த ‘மாஸ்க்’ பயன்படுத்துவது ‘ரிஸ்க்’
மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயந்தன் ரங்கநாதன், ”கொரோனா பாதிப்பு காலத்தில் தினமும், 2 லட்சம் வரை முகக்கவசம் தயாரிக்கப்பட்டது. அதன்பின் தினமும், 10 ஆயிரம் என்றளவு உற்பத்தி குறைந்தது. தற்போது மீண்டும், தினமும், 50 – 70 ஆயிரம் வரை முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். அதனால், அவற்றின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்போது ஒரு சில இடங்களில் தேவை அதிகரித்துள்ளதால் தரமில்லா முகக்கவசங்களும் விற்பனைக்கு வருகின்றன. மூன்று அடுக்குகளின் நடுப்பகுதியில், ‘பில்டர்’ இல்லாத தரம் குறைந்த முகக்கவசங்கள் உற்பத்தியாகின்றன. இந்த பில்டர்கள் பாக்டீரியாக்களை தடுக்கும் திறன் கொண்டவை. அவை இன்றி முகக்கவசம் அணிவதால் பலன் இல்லை,” என்றார்.
Leave a Reply