மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட ஓடந்துறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் வரும் சாக்கடை கழிவு நீரால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து அதிரடியாக கழிவு நீர் செல்லும் வழியில் மண்ணைக் கொட்டி வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். மீண்டும் ஓடந்துறை ஊராட்சிக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் அருகே ஊட்டி சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், கடைகள் உள்ளன.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதி ஓடந்துறை ஊராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. ஹோட்டல்கள், விடுதிகள், கடைகள் போன்றவற்றின் சாக்கடை கழிவு நீர் அடர்ந்த வனப்பகுதிகள் விடப்படுகின்றன.
இதனால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பலமுறை ஓடந்துறை ஊராட்சி நிர்வாகத்திற்கு வனத்துறை அறிவுறுத்தியும், சாக்கடை கழிவுநீரை வனத்திற்குள் செல்லாமல் இருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதிரடியாக கழிவுநீர் செல்லும் பாதையை மண் கொட்டி அடைத்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் கூறியதாவது:மேட்டுப்பாளையம் வனச்சரகம் ஓடந்துறை காப்புக்காடுக்கு உட்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ள பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பது கண்டறியப்பட்டது. குடியிருப்பு பகுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தான் இந்த கழிவு நீர் வருகிறது.
அந்த கழிவு நீரை உடனடியாக தடுக்கும் படி, ஓடந்துறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றார்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து வனவிலங்குகளின் உயிரை பாதுகாக்க, கழிவுநீர் செல்லும் பாதையை மண் கொட்டி தற்காலிகமாக மூடி உள்ளோம். ஊராட்சி நிர்வாகத்திற்கு கழிவு நீரை தடுக்க ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் நோட்டீஸ் வழங்கப்படும். கழிவு நீர் மீண்டும் வனத்திற்குள் செல்லும் பட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வன ஆர்வலர்கள் கூறுகையில், ”இப்பகுதியில் அதிகளவில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. ஓடந்துறை ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.
வனத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்,” என்றனர்.
Leave a Reply